ஆகப் பிடித்தவைகளின் பட்டியல்


ஆகப் பிடித்த புத்தகம்—
பழைய காகிதத்தில்
பழுப்பு நிற மணம் மறையா
வார்த்தைகள்

ஆகப் பிடித்த எழுத்தாளர்—
காற்றில் கவிதைகளைச் சுருட்டி வீசுபவர்.

ஆகப் பிடித்த உணவு—
என் அம்மை ஆண்டாளுக்குப் பிடித்தது

ஆகப் பிடித்த மது—
இரவை மறந்து சிரிக்க வைக்கும் திராட்சை ரசம்

ஆகப் பிடித்த பொழுதுபோக்கு—
மேகங்கள் தீட்டும் சித்திரங்களில்
என்னை இழப்பது

ஆகப் பிடித்த சினிமா—
என்னை எனக்கே நினைவூட்டும்
பாத்திரங்களின் சலனம்

எல்லாம் சொன்னேன்.

‘ஆகப் பிடித்த தருணம்?’
என்றார் கடவுள்,

‘ஒரு மலைவாசஸ்தலத்தில்,
முன்னிரவு நேரத்தில்,
நெருப்புக் கம்பளம் பரவி எரிய,
பைன் தேவதாரு மரங்கள் மெல்லிய பாடல் பாட,
மாற்றார் சூழ்ந்திருக்க,
அவள் ஒரு முத்தம் கொடுத்தாள்.

அந்த முத்தம்—
காலத்தின் அணுப்புள்ளியில்
அகாலத்தைப் பறித்து வைத்தது.’

மின்னலாய்த் தெறித்த முறுவலுடன்
கடவுள் கேட்டார்
‘சாட்சி உண்டா?’

மாற்றாரை அழைத்தேன்.
ஒன்றும் சொல்லாமல்
ஓடி ஒளிந்தார்கள்.

நிலவை அழைத்தேன்—
அது மேகத்தின் பின்னால்
மறைந்து கொண்டது.

நட்சத்திரங்களை அழைத்தேன்—
அவை என் அவசரம் புரியாமல்
வழக்கம்போல் கண்களைச் சிமிட்டின.

பைன் தேவதாரு விருட்சங்களை அழைத்தேன்—
அவை காற்றில் அசைந்து அசைந்து
ஏதோ சொல்ல முயன்றன,
எனக்குத்தான் புரியவில்லை.

இறுதியில், கடவுளிடமே முறையிட்டேன்:

’அதிசயங்களை விளக்க இயலாது,
சாட்சிகளுக்குத் தெரிந்த உண்மை
உனக்குத் தெரியவில்லையா?’
எனச் சிரித்த கடவுள்
ஒரு காக்கையின் சிறகாக மாறி
வானில் மறைந்தார்.