அலைந்த இலை ஸ்திரம் கண்ட கதை

என்ன செய்தியெனக் கேட்ட
மைனாவிடம் ஒரு அதிசயம்
கேளென்றேன்

சென்ற ஆண்டு
நானொரு புதினம்
எழுதிக்கொண்டிருந்தேன்

ஒரு வாரமாக மோகினிக்குட்டியோடு
தொடர்பில்லை என்பதைக்கூட
அறியா நிலை

என்ன செய்தி எப்படியிருக்கிறாயெனக்
கேட்டு
மோகினிக்குட்டியிடமிருந்து
ஒரு விசாரிப்பு வந்ததைக்
கண்டேன்
என் இணையதளத்தில் மறுநாள்
எழுதினேன்

”புதினத்தில் வாழும்போது
யாரோடும் தொடர்பில் இருக்க
மாட்டேன்;
இதற்கு விலக்கில்லை.”

அப்படியிருந்த எனக்கு
இப்பொழுது
மோகினிக்குட்டியை
நொடிப்பொழுது
பிரிந்தாலும்
பதற்றம் கொள்கிறது
ஏனிப்படி என
மைனாவிடம்
கேட்டேன்

வா என்னுடனெனச் சொல்லி
இட்டுச் சென்றது
மைனா

அது ஒரு மலைமுகடு
அதிலே ஒரு சித்திரக் குள்ளன்
அவன் சொன்னான்,
“அலைந்த இலை
ஸ்திரம் கண்டது.’