ஆண்டவன்


அரசன்

படிக்காத மேதை
மேதைகளின் புதிர்
வார்த்தைகளில் மந்திரம் தீட்டுபவன்
எங்கே மனிதர் துயருறுகிறாரோ
அங்கே தோன்றி விண்ணைத் தொடுகின்றான்.
தீயோரை வதைத்து தர்மத்தை உயர்த்துகின்றான்
நல்லோரைத் துதித்து நம்பிக்கை பொழிகின்றான்
குருதியைப் பாலாக்கி சிறார்க்கு அளிக்கின்றான்
முதியோரை முதுகில் தாங்கி
புன்னகையை இறைக்கின்றான்

நீதிமான்

செல்வந்தனின் மைந்தனொருவன்
ஏழைப் பெண்ணொருத்தியை வன்கலவி செய்து
இருளில் தள்ளினான்
அரசும் பணமும் அதிகாரமும் கூடி
வலியோன் பக்கம் வலுவாய் நின்றன.
கலியில் இதுவே நியதி என்றார் மூத்தோர்
அறம் வீழ்ந்ததென்று அரற்றினர் கற்றோர்
எதிர்ப்பு காற்றில் கரைந்து மறைந்தது
அப்போது தோன்றினான்—நம் நாயகன்!
வலியோனையும் வலியோனைத் தாங்கிய ஆயிரம் பேரையும்
ஆயுதமேங்கி அழித்தான்

அழகன்

அழகிகளின் கனவில் மிதக்கும்
ஆழிமழைக் கண்ணன்
அவன் நடையில் அகிலம் நடுங்கும்
பனித்துளி படர்ந்த நிலவின் வதனம்
நள்ளிரவில் மின்னும் மோகன பிம்பம்
எல்லாம் காணக் கண் கோடி வேண்டும்
கணக்கிலா கன்னியரின் கனவுத் தோழன்
ஆடை கழற்றித் திகம்பரனானால்
தீர்த்தங்கரரே தீர்ந்து போவார்

மகாநடிகன்

சலன பிம்பமல்ல அவன் நடித்தது
திரைக்காவியம்
உண்மையின் பிரதிபிம்பம்.
அதன் வெற்றிக்காக நாவை அறுத்தேன்
வேங்கடவன் உண்டியலில் காணிக்கை இட்டேன்.