என்னுடைய சிறந்த மாணவர்கள் என்று சீனியையும் ஸ்ரீயையும் சொல்ல வேண்டும். இவர்கள் இருவரும் என்னிடம் நேரடியாகக் கற்றவர்கள். வளன் தொலைவிலிருந்து கற்றவன். அவனுக்கு நான் வால்டன் பற்றியும் அதை வாழ்ந்து எழுதிய ஹென்றி டேவிட் தோரோ பற்றியும் கற்பித்த போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன். அப்போது அவன் கனவில்கூட கண்டிருக்க மாட்டான், பதினைந்து ஆண்டுகளில் அவன் வால்டனில் அமர்ந்து தோரோவையும் சாருவையும் நினைத்துக்கொண்டிருப்பான் என.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று பாதிரியாராக இருக்கும் ஒருவர் என்னுடைய மாணவராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதன் அனுகூலங்கள் என்ன என்பதை நீங்கள் வளனரசுவிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Henry David Thoreau எழுதிய வால்டன் (Walden; or, Life in the Woods) வெளிவந்த ஆண்டு 1854.
அமெரிக்காவில் மாஸசூஸட்ஸ் நகரில் ரால்ஃப் வால்டோ எமர்ஸனுக்குச் சொந்தமான வால்டன் என்ற வனத்தில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அந்த ஏரியின் அருகே ஒரு சிறிய குடிலை அமைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள் சமூகத்திலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துக்கொண்டு வெளியுலகத் தொடர்பே இன்றி வாழ்ந்தார் தோரோ. பிற்காலத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தோரோவின் இந்த வாழ்க்கை முறைதான் அடிப்படையாக இருந்தது என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார். எமர்ஸனும் காந்தியின் அரசியல் தத்துவங்களை பாதித்த ஒரு தத்துவவாதிதான்.
இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். தோக்யோ நகரில் ஒரு ஆஃப்ரிக்கனைச் சந்திக்கிறேன். எந்த நாடு என்று கேட்டதற்கு செனகல் என்கிறான். உடனே நான் உஸ்மான் செம்பீன் படங்களைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்கிறேன். அவன் பேச்சு மூச்சு நின்று விட்டது போல் என்னைப் பார்க்கிறான். செனகலுக்கு வெளியே உஸ்மான் செம்பீன் என்ற பெயர் அவன் செவிகளில் விழுந்தது அதுவே முதல் முறை. அதுவே கடைசி முறையாகவும் அமையலாம்.
பிறகு இருவரும் உஸ்மான் செம்பீனின் திரைப்படங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உஸ்மான் செம்பீன் செனகல் நாட்டின் தேசிய அடையாளம். நான் அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் நண்பர்களும் பாங்கோங் ஏரிக்குச் சென்றிருந்தோம். லே லடாக் பகுதியில் சீனத்து எல்லையில் இருக்கும் ஏரி. கடல் போல் விரிந்த ஏரி அது. நீரும் கடல் நீரைப் போலவே உப்பாக இருக்கும் என்பதால் அது முன்பு கடலாகத்தான் இருந்தது என்கிறார்கள்.
அங்கே எங்களுக்கு அருகில் நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் போல் தெரிந்தது. லெபனான் அல்லது இஸ்ரேல். இரண்டில் ஒன்றுதான். மொழியைப் பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். நிச்சயம் அரபி இல்லை. அப்படியானால் இஸ்ரேல்தான். ஹீப்ரூ மொழியைத்தான் நான் கேட்டதே இல்லை. அவர்கள் பேசிய புதிய மொழி ஹீப்ரூவாகத்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் இஸ்ரேலா என்று கேட்டேன். ஆம் என்றார்கள். இஸ்ரேலிய இலக்கியம் படித்திருக்கிறேன். அதில் என் எழுத்தையே பாதித்த முக்கியமான நாவல் Sayeed, The Pessoptimist. ஆனால் அதை எழுதியவரின் பெயர் மறந்து விட்டது. இண்டர்நெட்டையும் பார்க்க முடியாது. எந்தத் தொடர்பும் இல்லாத இடம். நாவலின் பெயரைச் சொன்னேன். அவர்களுக்குத் தெரியவில்லை. இஸ்ரேலில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி வைத்தவர். யூதர் அல்ல, அரபி என்றேன். எமில் ஹபீபி என்று பெயரைச் சொல்லி விட்டார்கள்.
கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சேர்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஐரோப்பிய சினிமாவின் மேதைகள் என்று கருதத்தக்க Krzysztof Kieślowski, Andrzej Wajda, Roman Polanski, Krzysztof Zanussi போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களை நீங்கள் பார்த்திருந்திருத்தால் அந்தப் பல்கலைக்கழகத்தில் உங்கள் மதிப்பு எப்படி கூடும்? இவர்களில் கீஸ்லோவ்ஸ்கி, ரோமன் பொலான்ஸ்கி ஆகிய இருவரும் நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிய வரக் கூடும். ஆனால் யானூஸி, வாய்தா ஆகியவர்களை நான் சொன்னால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். வேறு வழியில்லை. ஒருவேளை திரைப்படக் கல்லூரிகளில் கற்பிக்கப்படலாம். ஆனால் மிக நிச்சயமாகத் தெரியும், ப்ரஸீலிய இயக்குனர்கள் Glauber Rocha, Nelson Pereira dos Santos போன்றவர்களின் திரைப்படங்கள் நம் திரைப்படக் கல்லூரிகளில்கூட கற்பிக்கப்படுவதில்லை.
இதை நான் இப்படி வெளிப்படையாக, ’அடக்கமில்லாமல்’ சொன்னால் ’சாருவுக்குத் திமிரைப் பார்’ என்கிறார்கள். அது போன்ற அசடுகளை விட்டு விடுவோம்.
உங்களுக்கு ப்ரஸீலில் இந்தியத் தூதரகத்தில் பணி என்று வைத்துக்கொள்வோம். என்னுடைய மாணவர் நீங்கள். என்னுடைய வழிகாட்டலில் மேற்குறிப்பிட்ட இயக்குனர்களின் திரைப்படங்களைப் பார்த்து விட்டீர்கள். உங்கள் இடம் உங்கள் பணியிடத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதேபோல் பொலிவிய இயக்குனர் ஹோர்ஹோ ஸான்ஹினேஸ் (Jorge Sanjinés). இவர்களின் திரைப்படங்களை நீங்கள் பார்த்து விட்டால் ஐரோப்பாவிலேயே நீங்கள் ஒரு பெரும் புத்திஜீவியாகக் கருதப்படுவீர்கள்.
இன்று போலிஷ் சினிமா பற்றி ஸ்ரீக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது மேற்கண்ட விஷயங்களையெல்லாம் அவளிடம் சொன்னேன். ஏனென்றால், நான் உங்களிடம் ஒரு கல்லைக் கொடுக்கிறேன் என்றால் அது கூழாங்கல் அல்ல, வைரம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொல்லாமலேயே தெரியும் என்றாள் ஸ்ரீ. அந்த வகையில் நல்லது.