தோற்றம்
கான்ஸ்டான்ஸியோ பெஸ்ச்சியின்
பரமார்த்த குரு
மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன்.
சீடர்கள் ஐவர்
புராணங்களின் புழுதியில்
காலடி பதித்து
குருவைத் தாங்கினர்.
இந்தப் பின்நவீனத்துவ குருவுக்கோ
சீடர் எண்ணிலர்
ஒருநாள் பின்நவீனத்துவ குரு அறிவித்தார்:
’குரு இறந்து விட்டார்;
தந்தையின் பிரம்பு, அதிகாரத்தின் இரும்புத் தடி,
ஆதிக்கத்தின் சுருக்குக் கயிறு –
எல்லாவற்றையும் குப்பைத்தொட்டியிலே
வீசுங்கள்…”
’வீசினோம் நண்பா’
கூவினர் சீடர்
நண்பா எனக் கேட்டு
உளம் குளிர்ந்தார்
பின்நவீனத்துவ குரு
பின்னே இருக்காதா, குருவை
நண்பா என எவன் அழைத்தான்
வரலாற்றில்?
ரொலாந் பார்த்துக்கே
கிடைத்திராத அதிர்ஷ்டமென்றார்
பின்நவீனத்துவ குரு
காலப்போக்கில் சிலர்
பின்நவீனத்துவ குருவுக்கே
பாடம் எடுக்கக் கண்டு
அவர்களை மட்டும் பள்ளியிலிருந்து
களையெடுத்தார்.
காதல்
காதலுக்குக் கண்ணில்லை என்பது சும்மாவா?
எழுபத்து மூன்று வசந்தங்களில்,
இருபத்து மூன்றின் தென்றலில்
மின்மினியாய் மிதக்கின்றார்
பின்நவீனத்துவ குரு
ஹையா ஹையா
ஸல்மான் ருஷ்டி,
ஓர்ஹான் பாமுக்,
நம் கமல்ஹாசன் –
ஏன் – அல் பச்சீனோவையே
வென்றேனென
பஜாரில் வந்து கூவுகிறார்
ஒருதலைக் காதல் இல்லையாம்
இரு பக்கமும் காதலாம்…
’ங்கொய்யால’
சீடர்களின் எதிர்வினை
தவறாக எண்ணாதீர்
பொறாமை இல்லை, புழுக்கமுமில்லை,
நண்பர்—ஆம், நண்பர்—
இப்படி ஒரு பெண்ணின் பின்னால்
தெருவில் திரிகிறாரே?
பட்டினத்துப் பிள்ளையின் கவிதை
புத்தகத்தில் பழுப்பாகியுமா இப்படி?
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
என்பதை உணராதவரா நம்
பின்நவீனத்துவ குரு
காதளவோடிய கலகப் பாதகியிடம்
மனதை விட்டுவிட்டு இப்படி
காதல் கவிதையெழுதி காணாமல்
போகிறாரே?
சீடரெல்லாம் புலம்பினர்
கொலைவெறி கொண்டனர்
செவி வழியாய்
பின்நவீனத்துவ குருவுக்கு
சேதி வந்தது
“அடேய், முட்டாக் கூதிகளா!
பதினாலு முதல் எழுபத்து மூன்று வரை,
தினம் ஒரு முறை, இரு முறை,
மூன்று முறை, நாலு முறையென
சுயமைதுனத்தின் சுழலில்
உயிர் தவித்தவன் நான்.
காதலி இல்லாத கனத்த இரவுகள்…
உங்களுக்கென்ன தெரியும்?
எப்போதும் நான் காதலுக்குள்ளேயும்
வெளியேயும் இருக்கின்றேன்
உள்ளேயிருந்தால் கர உதவி
தேவையில்லை
வெளியேயிருந்தால்
ஒரு தடவை ரெண்டு தடவை
மூணு தடவை
சமயங்களில் நாலு முறை
கடந்த பல காலமாய் காதலி
இல்லை
கர மைதுனத்திலேயே காலம்
போயிற்றென்று கதறினேன்
இப்போது ஒரு பெண்ணின்
யோனியில் அடைக்கலம்
கொண்டு கரமைதுனத்தின்
இருளிலிருந்து மீண்டெழுந்தேன்
அதில் உங்களுக்கென்னடா
பிரச்சினையெனக் கேட்டார்
பின்நவீனத்துவ குரு
சீடர்கள் பதில் சொன்னார்:
நண்பா, உன் அந்தரங்கம்
கவிதையாகி,
வீதிக்கு வந்ததுதான்
எம் கவலை.
பிரம்பு
காதலை கழிவு நீரெனக்
கருதுவீரா?
பின்நவீனத்துவ எழுத்தாளனின்
லொலிதா, உமக்கு ஒரு காதல் கதையா?
ரோமியோ ஜூலியட்டை
குப்பையென மறுப்பீரா?
காதலனைப் பிரிந்து
கைவளை தளர்ந்த காதலியைப்
பாடிய சங்கப் புலவனை
காளவாயில் தூக்கி எறிவீரா?
பிரம்பை எறியுங்கள் எனச் சொன்னால்,
நீங்கள் மற்றொரு பிரம்பை
எடுத்துக் கொண்டீரே, பிள்ளைகாள்?
சொல்கிறேன், கேளுங்கள்—
பின்நவீனத்துவம்,
பெருங்கதையை உடைக்கிறது,
ஒரே உண்மை, ஒரே அர்த்தம்
என்பதையும் மறுக்கிறது
ராமகதையின் விளையாடலை
நாம் அறிவோம்.
ஆனால், காதல்—
தனி மனித மூச்சு
என் பசியின் கதையைச் சொன்னால்,
விழுந்து விழுந்து சிரிக்கின்றார்.
பனகல் பூங்காவில்,
அரை மயக்கத்தில் கிடந்தேன்,
புல் தின்றால் பசி அடங்குமென்ற
சித்தர் வாக்கு நினைவு வந்தது.
புல்லில் மூத்திர நாற்றம்,
மஞ்சள் கோழையாய் வாந்தி.
என்னருகில்
எலும்பும் தோலுமான நாய் ஒன்று
மனித நரகலை நறநறவெனத் தின்கிறது.
இதைச் சொன்னால்,
சிரிக்காதவர் இல்லை.
என் காதல் கதையும் இப்படித்தான்.
சென்ற வாரம் நடந்த கதை கேளும்
ஒருமுறை புணர்ந்தேன்
பத்து நிமிட இடைவெளி
இரண்டாம் முறை புணர்ந்தேன்
பத்து நிமிட இடைவெளி
மூன்றாம் முறை புணர்ந்தேன்
பத்து நிமிட இடைவெளி
நான்காம் முறைக்கு ஆயத்தமானால்
நீ செக்ஸ் அடிக்ட் அல்ல,
செக்ஸ் மேனியாக் என்றாள் காதலி
இதுதானென் காதல் கதை
அடேய், முட்டாக் கூதிகளா!
தினம் நாலு முறை
சுயமைதுனத்தில் சீரழிந்து,
ஒரு பெண் கிடைத்து,
கவிதையாக எழுதினால்,
உங்களுக்கு என்னடா போச்சு?
பாப்லோ நெரூதாவுக்கு நோபல்,
எனக்கு உங்கள் சுன்னி மயிரா?
ஆண்டாளையும், மஹாதேவி அக்காளையும்
நீங்கள் ஏற்காவிட்டால்,
உங்கள் பிரம்பை முறித்து,
ஒற்றைக்கு ஒற்றை
அழைக்கிறேன்.
டூயல் என்பார்கள்,
நம் நாட்டில் துப்பாக்கித் தடை,
கைச்சண்டையில் கழுத்தை நெறிப்பேன்,
கொட்டையில் உதைப்பேன்.
நான் செத்தால், என் காதல் ஜெயித்தது.
நீங்கள் செத்தால், எனக்கு சிறை.
என் காதலை அவமதித்தால்,
என் காதலியை அவமதித்தால்,
என் கவிதையை அவமதித்தால்,
மரணமே பரிசு—
உங்களுக்கு,
எனக்கு,
எல்லோருக்கும்.
பின்நவீனத்துவக் காதல் கவிதை
சரி, சீரியஸாகப் பேசுவோம்—
ரொலாந் பார்த்,
காதலின் பிரதியை உடைத்தவன்*
தேய்வழக்கை எரித்தவன்.
தெரிதா?
’காதல் பிரதியை காலி செய்யுங்கள்,
அதிகாரத்தின் கிடுக்கிப் பிடியை,
கலாச்சாரத்தின் சுருக்குக் கயிறை
களையுங்கள்’ என்றான்.
மார்க்ஸ், குடும்பத்தை உடைத்தவன்,
பொருளாதாரத்தின் பாறைகளை
பொடியாக்கியவன்
ஜென்னியை காதலித்தான்—
அவள், அவனது மூச்சு,
அவனது புரட்சியின் முதல் எழுத்து.
ஆனால்,
ஜென்னி இறந்தபின்,
ஒரு வருடத்தில்,
அவன் இதயம்,
நின்றது.
புரட்சிக்காரர்களே,
காதல் முதலாளித்துவமா?
அவன் மறுத்தவை,
அவன் மார்பில் பற்றி எரிந்தன.
என் கவிதை,
ஜென்னியின் மௌனத்தில்
எழுதப்பட்ட காமத்தின் தீச்சுடர்,
உங்கள் பிரம்புக்கு பதிலாக இல்லை.
இன்னொரு சம்பவம்
வீதி மூலையில்
விலகியிருந்தான் அவன
ஒரு குதிரையின் பரிதாபமான குரல்
பிரம்பின் வீச்சு
மண்ணின் மீது வீழும் கண்ணீர்.
அவன் ஓடவில்லை,
அவன் பார்த்தான்
மனிதன் ஒருவன்
தனது சக உயிரை
இவ்வாறு காயப்படுத்த
முடிந்தால்
இவர்களையெல்லாம் படைத்த
இறைவன் எங்கே?
குதிரையின் அருகே ஓடினான்
குதிரையின் கழுத்தைத் தன்
கரங்களால் சுற்றிக் கொண்டான்
அந்த வெண்குதிரையின்
சொல்லவொண்ணாத் துயரம்
அவன் மூளையைப் பிளந்தது.
நடுத்தெருவில் வீழ்ந்தான்
பைத்தியமாக அல்ல,
பரிவின் நெருப்பில் எரிகின்றவொரு
சருகாக
அன்று முதல்
அவன் யாரையும் காதலிக்கவில்லை.
மானுட குலத்தை முற்றாய் மறுதலித்தான்
ஒரு குதிரையின் கண்ணீர்
அவனை மானுடம் விட்டுத் தனிமைப்படுத்தியது.
பதினோரு ஆண்டுகள்
அவன் தன் பெயர் மறந்திருந்தான்
இந்த மானுட குலத்தின் சிந்தனையையே
மாற்றியமைத்த
தன் எழுத்தையும் மறந்திருந்தான்
இதையேதான் பின்நவீனத்துவ குருவும்
காதல் காதலென எழுதுகிறார்
அதிலென்ன தவறு கண்டீர்,
பிள்ளைகாள்!
இறுதியாய் இன்னொன்று
உஞ்ச விருத்தி செய்துகொண்டிருந்த
யாரோ ஒருவரிடம் இளைஞன் கேட்டான்
என்ன செய்தால் ராமனைப் பார்க்கலாம்?
தொண்ணூற்றாறு லட்சம் முறை ராமநாமம்
ஜெபியென்றார் அந்த மனிதர்
ஜெபித்தான்
ஒரு குரல், ஒரு நாமம்,
தனது மூச்சின் துடிப்புக்கு ஒத்திசைந்து
வாழ்நாளின் எல்லா வாசல்களிலும் ஒலித்தது.
வீட்டுத் திண்ணையில் அமர்ந்து,
மழையின் கீழ் நனைந்தபடி,
சூரியன் மெலிதாய் விழும் நண்பகலிலும்,
நிசப்தமான நடுக்கதிர்ச் செவ்வாய்களிலும்
ஜெபித்தான்.
கணங்கள் கடந்தன,
மனிதர் வந்தார், மறைந்தார்
அவன் மட்டும் அசையாமல்
ராமனின் பாதங்களில் எண்ணிக்கை வைத்தான்.
இங்கே கவிதையைக் கொஞ்சம்
விட்டுவிட்டு ஒரு கணக்கைப் போடலாம்:
ஒரு நாமஜெபம் — ரெண்டு விநாடி
ஒரு நிமிடத்தில் முப்பது முறை.
தினமும் நாலு மணி நேரம் ஜெபித்தால்?
ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து எண்ணூறு,
நாலு மணி நேரத்தில் ஏழாயிரத்து இருநூறு.
இந்த ஏழாயிரத்து இருநூறை
தொண்ணூற்றாறு லட்சத்தில் வகுத்தால்
மூணே முக்கால் வருஷம்.
ஆனால் அவர் தினமும்
உஞ்சவிருத்திக்குச் செல்லவேண்டும்,
அந்த நேரத்தில் இசைதான் நெஞ்சில் பாயும்.
அதனால் ஜெப நேரம் ரெண்டு மணி —
அப்படி என்றால் ஏழரை ஆண்டுகள்!
ஓ… அதனால்தான்
தொண்ணூற்றாறு லட்சம் முறை
ஜெபித்தும்
ராமன் வராதது கண்டு
“என் இளமைக் காலத்தையே
உனக்காக அர்ப்பணித்தேனே!” என
அரற்றுகிறாரா?
புரிகிறது… புரிகிறது…
அப்போது அவர் பாடிய கீர்த்தனைகள்
காதல் மொழி இல்லையா, பிள்ளைகாள்?
சீதைக்கும் ஹனுமனுக்குமே
தன்னருகில் இடம் தந்தவன்,
என்னை மட்டும் ஏன் புறக்கணிக்கிறாய்
எனக் கதறுகிறார்.
வான்காக் தன் காதலிக்காகக்
கதை அறுத்துத் தருகிறான் —
நான் கவிதை எழுதுகிறேன்.
இதையெல்லாம் பாராமல்
அரைகுறையாய் அறிந்து,
குருவின் தலையில்
பிரம்பால் அடிக்கும்
பரமார்த்த சீடர்களே—
நீங்கள் பின்நவீனத்துவவாதிகள் அல்ல,
கையில் மோலோடோவ் காக்டெய்லுடன்
அதிகாரத்தை ஆராதிக்கும்
ஆதிக்கவாதிகள் – ஸாரி –
பின்நவீனத்துவ ஆதிக்கவாதிகள்
ரோமியோ ஜூலியட்
ரோமியோ ஜூலியட்,
தினம் மேடையேறுகிறது,
பழைய காதல்
புதிய வசனங்கள்,
பார்வையாளர் மீண்டும் மீண்டும்
வருகிறார்.
நாடகாசிரியன்
ஒரு பெண்ணை காதலிக்கிறான்
அந்தக் காதலை அன்றைன்றைய
நாடகத்தில் வசனமாக்குகிறான்.
பதினாறாம் நூற்றாண்டிலேயே
ஆட்டோஃபிக்ஷன் நாடகம்.
அதைத்தான்
பின்நவீனத்துவ குரு செய்கிறார்—
காதலை கவிதையாக்கி
வாழ்வை வசனமாக்கி
தெருவில் கூவுகிறார்.
என் உடல் உடைந்த பாறை
அவள் அதன் மழைத்துளி.
என் கவிதை,
காற்றில் எழுதப்பட்ட
காமத்தின் தீச்சுடர்
உங்கள் பிரம்புக்கு
பதிலாக இல்லை.
*A Lover’s Discourse: Fragments by Roland Barthes