தியாகராஜாவை மீண்டும் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டிய சில புத்தகங்களை முடிக்கலாம் என்று நினைத்து நேற்று அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவின் The Days of the Rainbow நாவலை எடுத்து நேற்றே முடித்து விட்டேன். அது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன். ஆனால் ஒரு விஷயம் என் மனதில் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் திரும்பத் திரும்ப சீலே?
எத்தனை விளக்கினாலும் நானே இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டு, தொடர்ந்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இப்போது அந்தக் கேள்விக்கான பதிலை அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவை வைத்துப் புரிந்து கொள்வோம்.
ஸ்கார்மேத்தா 1940இல் பிறந்தவர். சீலேயர்களைப் பொருத்தவரை வயது முக்கியமாகத் தோன்றுகிறது. இந்தியரின் ஐம்பதை ஒத்திருக்கிறது சீலேயரின் எண்பது. பெரும்பாலானவர்கள் தொண்ணூறைக் கடந்து வாழ்கிறார்கள். அது கூடப் பெரிய விஷயமில்லை. தொண்ணூறு வரை சிகரெட்டும் ஒயினுமாக வாழ்கிறார்கள். நிக்கானோர் பார்ரா 104 வயது வரை வாழ்ந்தார். பினோசெத் 91 வயதில் இறந்தார். என் வழிகாட்டியாக வந்த ரொபர்த்தோவுக்கும் என் வயதுதான். நான் சென்ற போது 67. ரொபர்த்தோவும் 67. ஐந்து கிலோமீட்டர் தூரத்தை அனாயாசமாக நடந்து சென்று கொண்டிருந்தார்; கையில் சிகரெட் புகையப் புகைய. பெரும்பாலான சீலேயர்கள் சிகரெட் புகைக்கிறார்கள். அந்த ஊர் குளிருக்கு அது தேவைப்படுகிறது என்கிறார்கள். ஐரோப்பாவிலும் குளிர்தான். ஆனால் சீலேயில் குளிரிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. உதாரணமாக, வானவில் நாட்கள் நாவலில் வரும் தத்துவப் பேராசிரியர் ஸாந்த்தோஸ் வீட்டில் அவரும் அவருடைய மகனும் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் முழுநேரமும் அறையில் இருக்கும் ஹீட்டரைப் போட்டுக் கொண்டிருக்க இயலாது. கொஞ்ச நேரம் போட்டு அணைத்து விடு என்கிறார் மகனிடம். முழு நேரமும் போட்டால் அவருடைய சம்பளப் பணம் முழுவதுமே மின்சாரக் கட்டணத்துக்குப் போய் விடும். ஒரு பேராசிரியரின் நிலையே இப்படி என்றால் ஒரு உதிரித் தொழிலாளியான பயண வழிகாட்டி ரொபர்த்தோவின் நிலை எப்படி இருக்கும்?
ரொபர்த்தோவின் வீட்டில் ஹீட்டரே கிடையாது. ஒன்றுக்கு இரண்டாகக் கம்பளியைத்தான் போர்த்திக் கொள்ள வேண்டும் என்றார் ரொபர்த்தோ. இப்படிப்பட்ட ஏழ்மையிலும் சீலேயர்கள் தங்கள் ஆன்மாவை இழந்து விடாமல் இருப்பது எப்படி? அது இருக்கட்டும். ஆன்மாவை இழப்பது என்றால் என்ன? தலைவியின் கால்களைத் தொட்டு வணங்குவதற்காக யானைக்கால் போட்டுத் தவழ்ந்து செல்லும் கலாச்சாரம்தான் ஆன்மாவை இழத்தல். அந்த அவலத்தைப் பார்த்துக் கேலி செய்வதெல்லாம் சுலபம். ஆனால் ஒட்டு மொத்த தேசமே தன் ஆன்மாவை இழந்து போவதுதான் நான் குறிப்பிடுவது. ஆன்மாவை இழத்தல் என்றால் என்ன?
யாருக்குமே இலக்கியம் தெரியாது. இலக்கியம் தெரியாவிட்டால் அவலமா? இல்லை. வேறு என்ன தெரியும்? எதுவுமே தெரியாது. உலகிலேயே ஜப்பானியருக்கு அடுத்த படியாக பணம் சம்பாதிக்கத் தெரியும். ஆனால் அதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஆம், எதுவுமே தெரியாது. என்னால் ஒரு 25 வயது பெண்ணிடமோ இளைஞனிடமோ எதுவுமே பேச முடியவில்லை. மேட்டுக்குடியாக இருந்தால் ஓரளவு பாப் இசை பற்றிப் பேச முடிகிறது. அதிலும் வாக்னர் என்று ஆரம்பித்தால் ஓடி விடுகிறார்கள். இது போன்ற இளைஞர்களிடம் நான் பேசும் போது என் வீட்டுப் பூனைகளிடம் பேசுவது போல் உணர்கிறேன். உங்களுக்கு இதன் அர்த்தம் புரிந்தால் சரி.
இந்த இளைஞர்களுக்குப் பணம் தவிர வேறு எதுவுமே தெரியாததன் காரணமாக, கொள்கை, கோட்பாடு, தியாகம், கருணை, empathy என்று எந்த விஷயமுமே தெரியவில்லை. அட, குறைந்த பட்சம் நமது பாரம்பரியமாவது தெரியுமா என்றால் அதிலும் பூஜ்யம். சுயநலத்தைத் தவிர அவர்களின் உலகில் வேறு எதுவுமே இல்லை. ஆனால் அந்த சுயநலமும் கூட பரிதாபகரமாக இருக்கிறது. ஆரோக்கியத்தைப் பேணத் தெரியாது, நல்ல இசை தெரியாது, நல்ல இலக்கியம் தெரியாது, நல்ல சினிமா தெரியாது, நல்ல உணவு, நல்ல செக்ஸ் தெரியாது, மற்ற மனிதர்களுடனான நல்லுறவு தெரியாது, நல்ல பொழுதுபோக்கு தெரியாது. தெரிந்த ஒன்றே ஒன்று, பணம்.
பணத்துக்கு சமமாக, சினிமா. துபாயில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அவர் மகள் அவரைக் கேட்டாராம். (நடிகர் கமல்ஹாசன் துபாய் சென்றிருந்த போது). “ஏம்ப்பா, கமல் சுவாசித்த அதே ஆக்ஸிஜனைத்தானே நாமும் இப்போது சுவாசிக்கிறோம்?” இதற்கு நண்பரின் விளக்கம். புலிக்குப் பிறந்த்து பூனையாகுமா? நண்பர் கமலின் தீவிர ரசிகர். எனக்கும் நண்பர். இதைப் படித்தவுடன் அவரை ப்ளாக் பண்ணினேன். உடனே வாட்ஸப்பில் வந்தார். ஏன் ப்ளாக் பண்ணினீர்கள்?
சரி, அன்ப்ளாக் பண்ணுகிறேன் என்று அன்ப்ளாக் பண்ணி விட்டேன்.
சமூகம் இந்த அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது. துபாய் என்று அல்ல, தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சினிமா நடிகர்களைக் கும்பிட்டபடியே வாழ்கிறார்கள்.
ஆனால் சீலே எப்படி இருக்கிறது? ஸ்கார்மேத்தாவை வைத்து அனுமானிப்போம்.
ஸ்கார்மேத்தா மிகவும் ஏழ்மையான ஒரு அகதிக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தார். பினோசெத் காலத்தில் ஒரு ஆண்டு அர்ஜெண்டினாவிலும் பிறகு 1976இலிருந்து 1989 வரை ஜெர்மனியிலும் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். ஜெர்மனியில் அவர் பெர்லின் ஃபில்ம் அண்ட் டெலிவிஷன் அகாதமியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஸ்கார்மேத்தா என்னைப் போலவோ என் தமிழ் சகாக்களைப் போலவோ நூற்றுக்கணக்கான புத்தகங்களெல்லாம் எழுதவில்லை. பதினைந்து புத்தகங்களே எழுதியிருப்பார். அதிலும் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. பாப்லோ நெரூதாவின் வாழ்வில் ஒரு காலகட்டம் போஸ்ட்மேன் என்ற தலைப்பில் சினிமாவாக வெளிவந்து உலகப் புகழ் பெற்றது. அந்த சினிமா ஸ்கார்மேத்தாவின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. 2000 முதல் 2003 வரை ஜெர்மனியில் சீலேயின் தூதராக இருந்தார். 2014இல் சீலேயின் இலக்கியத்துக்கான தேசிய விருது பெற்றார். அந்த விருது 24 லட்சம் ரூபாய் ரொக்கமும் மாதா மாதம் 1.25 லட்சம் ரூபாய் உதவித் தொகையும் கொண்டது. (இங்கே எழுத்தாளர்களுக்கு வீடு கொடுங்கள் என்று முதல்வருக்கு நான் கடிதம் எழுதினால், மக்கள் கொரோனாவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது எழுத்தாளர்களுக்கு எதற்கு வீடு என்று பொங்கி எழுந்தார் ஒரு எழுத்தாளர். பிறகு போனால் போகிறது என்று 700 சதுர அடி வீடு கொடுங்கள், பிழைத்துப் போகட்டும் என்று எழுதினார். அதற்கு இன்னொரு எழுத்தாளர் வக்காலத்து. வீடு கொடுக்கக் கூடாது என்று பொங்கி எழுந்த எழுத்தாளருக்கு இப்போது சாஹித்ய அகாதமி விருது. அதற்கு ஒருத்தர் பாக்கியில்லாமல் வாழ்த்து!
அந்த்தோனியோ ஸ்கார்மேத்தா 2011இல் Premio Iberoamericano Planeta என்ற அமைப்பின் விருதையும் பெற்றார். அந்த விருது ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்பு உடையது. அந்த விருதைப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் ஹோர்ஹே வோல்ப்பியை ஒரு சர்வதேச இலக்கிய அரங்கில் நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன். ஏதோ ஒரு ஹாலிவுட் நடிகரைச் சந்தித்தது போல் இருந்ததால் அதிகம் பேசவில்லை. இந்திய எழுத்தாளர்களில் அவருக்கு ஸல்மான் ருஷ்டியும் அருந்த்தி ராயும் மட்டுமே தெரிந்திருந்தது.
இப்போது சாந்த்தியாகோ தெ சீலேவில் வசிக்கும் ஸ்கார்மேத்தா வாரம் ஒரு நாள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சி நீயா நானா மாதிரியானது அல்ல. முழுக்க முழுக்க இலக்கியம். முழுக்க முழுக்க இலக்கியம். அந்த நிகழ்ச்சியைப் பத்து லட்சம் பேர் பார்க்கிறார்கள். இத்தனைக்கும் சீலேயின் ஜனத்தொகை 1.92 கோடி.
துரதிர்ஷ்டவசமாக நான் ஸ்பானிஷ் கற்றுக் கொள்ளாமல் போனேன்.
இன்னொரு முக்கிய விஷயம். ஒரு மனிதனுக்கு இலக்கியம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. Expedition Happiness என்ற ஒரு படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது. ஆவணப்படம். இலக்கியம் தெரியாவிட்டாலும் ஒரு மனிதன் அந்த ஆவணப் படத்தில் வரும் இளைஞனைப் போலாவது இருக்க வேண்டும்.
ஔரங்ஸேப் இன்னும் ஒரு மாதத்தில் வரும் என்று நினைக்கிறேன். அல்லது, ஒன்றரை ஆகலாம். வழக்கம் போல் 500 பிரதி விற்றால் மனுஷ்ய புத்திரனைப் போல் தமிழ்ச் சமூகத்தைப் பழி வாங்கி விடுவேன். குறைந்த பட்சம் 5000 பிரதி போக வேண்டும்.