1
என் அகவை எழுபத்து மூன்று
நூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன்.
இன்று காலை என் மனையாள் சொன்னாள்:
‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’
ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்
இதையே சொன்னான்
அவன் மரணமும் அப்படியே ஆனது
லூர்மரினில் இருந்து பாரிஸுக்கு
அறுநூற்று அறுபது கிலோமீட்டர்.
ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான்.
ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,
‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான்.
ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு
சாலை கண்ணாடிபோல் இருந்தது
கார் வழுக்கி மரத்தில் மோதியது
கம்யூ இறந்தான்
பாக்கெட்டில் ரயில் டிக்கெட்
பையில் அவன் எழுதிய நாவல், The First Man.
2.
என் தேசத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.
ஒரு பெருநகரில் இருபதாயிரம் கார்கள் இருக்க வேண்டும் என்றால்,
ஒரு லட்சம் இருக்கும்.
பதினைந்து நிமிடத்தில் போக வேண்டிய இடத்துக்கு ஒரு மணி நேரம் ஆகும்.
எல்லோரும் வெறி பிடித்து ஓட்டுகிறார்கள்.
தில்லியில் ஒரு காட்சி, நாற்பது வருடங்களுக்கு முன்
சிக்னலில் பச்சை விளக்கு வந்தது
முன்னால் கார் நகரவில்லை
பின்னால் ஸ்கூட்டரில் வந்த பெண் ஹார்ன் அடித்தாள்
காரில் இருந்தவன் இறங்கினான்.
ஓனர், டிரைவர் இல்லை
தோற்றத்தில் தெரிந்தது
அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்துத்
தரதரவென்று இழுத்துக்கொண்டு போனான்.
நம்ப முடிகிறதா?
நான் பார்த்தேன்
ஆனால் பாரிஸில், வெற்றிச் சதுக்கத்தில்,
ஆறு பெரிய சாலைகள், ஆறு உபசாலைகள்,
மொத்தம் பன்னிரண்டு சாலைகள்.
ஒரு சிக்னலும் இல்லை.
ஒரு போலீஸும் இல்லை
விபத்து நடந்ததாகக் கேள்விப்பட்டதில்லை.
அப்படிப்பட்ட தேசத்தில், இரண்டு பிரசித்தமான விபத்துகள்.
ஒன்று, பத்திரிகையாளர்களின் பரபரப்பினால் நடந்தது
மற்றொன்று, கம்யூவின் அபத்த மரணம்.
3.
என் தேசத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் சொல்வதை காற்றில் உலவும் தேவதைகள் கேட்கும்.
‘ததாஸ்து’ எனச் சொல்லி ஆமோதிக்கும்.
‘எனக்கு ஏதோ துர்சம்பவம் நடக்கப் போகிறது’ என்று சொன்னால்,
ததாஸ்து! ததாஸ்து! ததாஸ்து!
சம்பவம் நடந்துவிடும்.
நான் ஒரு முறை சுடுகாடு மாதிரி இருந்த ஒரு இடத்தில்,
‘செத்தாலும் இங்கே வசிக்க மாட்டேன்’ எனச் சபதமிட்டேன்
பிரபஞ்சம் விதித்தது
இருபது வருடங்கள் அந்தச் சுடுகாட்டில் வசித்தேன்
என்னை மூடனென்பீர்
நூறு சதவீதம் ஒப்புக்கொள்கிறேன்.
இந்தக் கதைகள் இன்று ஞாபகம் வந்ததற்குக் காரணம்?
என் மனையாள் சொன்னாள்,
பயத்தம் பருப்புக்கு…