1.
எழுத்தைக் கற்பித்தவன்
அறுபத்தைந்து ஆண்டுகள் எழுதியவன்.
சிறுகதை, நாவல், கட்டுரை—
ஆங்கிலம் சரளமாய்த் தெரிந்தாலும்
தமிழில் மட்டுமே எழுதினான்.
ஐநூறு பேர் படித்தால் அதிகம்.
அந்த ஐநூறில் நானொருவன்.
இருபத்தைந்து ஆண்டுகள்
சினிமா தயாரிப்பில் மேலாளர்
ஒருநாள் முதலாளி
கார் துடைக்கச் சொன்னபோது,
’நானொரு எழுத்தாளன்!’ என்று முணுமுணுத்தான்
’எழுத்தாளனென்றால் நீ இங்கேயா இருப்பாய்?’
என்று சிரித்தார் முதலாளி
அக்கணமே வேலையை உதறினான்
ஐநூறு பேருக்கு எழுதும் வேலை
சோறு போடாது
இவன் பேரும் தியாகராஜன்
ஆனால் உஞ்சவிருத்தி செய்யவில்லை
இக்காலத்தில் அது பழக்கமில்லை
பழக்கத்தில் இருந்தாலும் கேட்டிருக்க மாட்டான்
தன்மானம் மிகுந்தவன்
யாசகம் கேட்க அடையாளம் துறக்க வேண்டும்
அரிசியில்லாத நாட்கள்
ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க முடியாமல்
சுவாசம் திணறிய இரவுகள்
எல்லாம் உண்டு.
ஆங்கிலத்தில் எழுதி வந்த
சன்மானத்தில் குடும்பம் உண்டது.
2.
அறுபதைத் தாண்டி
மகன் வீட்டில் ஒரு அறை
நூலகம் எங்கே என்றேன்.
திரும்பிப் பார்த்தவர்,
‘இந்த அறையிலா புத்தகங்கள்?
நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்’
என்றார்,
என்றும் மாறா கைப்புடன்.
‘அடுத்தமுறை என்ன கொண்டு வரட்டும்?’
ஒன்றும் வேண்டாம் என்றார்.
வற்புறுத்திக் கேட்ட போது
‘ஒரே ஒரு மொளகா பஜ்ஜி’ என்றார்
அதிலிருந்து,
ஒவ்வொரு முறையும் ஒரு பஜ்ஜி.
வாழ்க்கை ஒரு மொளகா பஜ்ஜியில் அடங்கிவிடுமா?
நண்பரிடம் ஒரு நாள் சொன்னாராம்,
‘இவன் வெடிகுண்டு வைத்துவிடுவானோ?’
அன்பை அறிந்திலார்
அதை வெடிகுண்டு என நினைக்கிறார்கள்.
அன்பு ஒரு பஜ்ஜியாகவே இருக்கட்டும்.
எண்பத்தைந்தில் உடல் நீத்தார்
ஈமத்திற்கு வந்தவர் இருபத்தைந்து பேர்
பாதி சொந்தக்காரர்.
இத்தனைக்குப் பிறகும்
எழுதுகிறேன்.
யாருக்காக என்று
யாரும் கேட்கவில்லை