சுஜாதையின் கரங்கள்

நதியாய் ஓடும் கண்ணீரில்
உலகம் மூழ்க
அரச குமாரன்
துயரின் நிழலைத் தொட்டான்.
மனைவியின் மென்மை
சிசுவின் புன்னகை
காற்றில் கரைந்தன.
குதிரையின் உயிர்
பாதையில் உறைந்தது.

ஞானம் ஒரு தீப்பொறி
பிரேதங்களின் மீது நடந்து
எங்கெங்கோ அலைந்து
தவத்தின் எலும்புகளை அணிந்து
ஒளியின் மொழியைத் தேடினான்.
வழி மறைந்திருந்தது.

நாற்பத்தெட்டு நாட்கள்
அன்ன ஆகாரமின்றி
எலும்பும் தோலுமாய்
மரத்தடியில் நிலைத்தான்
நதியின் மௌனம் தவழ்ந்தது
சுஜாதையின் கரங்கள்
தங்கத்தில் பால் அன்னம் தந்தன.
உயிர் மீண்டது
ஞானம் இன்னும் மறைந்திருந்தது.

உயிர் மீண்ட தருணத்தில்
அவன் கண்டான்:
உடல் துயரின் பாதையல்ல.
நிழலும் ஒளியும் ஒன்றே,
மரமும் மனமும் ஒன்றே.
ஞானம் மௌனத்தின் மொழி
யென்ற ஞானம்
அவனுள்ளே பிறந்தது.