கடவுளின் கனா

உலகம் அழியப் போகிறது
தேதி குறித்தான் ஒருவன்
கொரோனாவை முன்னறிவித்தவன்
என்றபடியால் அவன் வார்த்தைகள்
மதிக்கப்பட்டன

ஒரு மாதம் இருக்கிறது
ஊடகங்கள் கூச்சலிட்டன
பங்குச் சந்தை புழுதியில் உருண்டது
நிலங்களும் வீடுகளும் மதிப்பிழந்தன
சிலர் பணத்தைப் புதைத்தனர்
வந்தால் லாபம்,
இல்லையெனில் நஷ்டமில்லை
அப்படித்தான் அவர்கள் கணக்கு
ஆனால் அது மணல் மேட்டில் எழுதப்பட்டது

விஞ்ஞானிகள் மறுத்தார்கள்
அழிவு இல்லை என்றார்கள்
நான் ஒரு காலத்தில் அவர்களை
கடவுளராய் மதித்தேன்
கொரோனா அந்த நம்பிக்கையை
மண்ணில் தூசாக்கியது

எனக்கு ஒரு கவலை
ஷேக்ஸ்பியரின் சொற்களும்
பீத்தோவனின் இசையும்
ஒரு புழுதிப் புயலில்
அர்த்தமின்றிக் கரையலாமா?

எப்படி அழியும் இந்த உலகம்?
கடவுளின் ஆயிரம் கோடி நாமங்கள்
கதையில் வருவது போலவா?
அல்லது
பாவங்களுக்கான
இறைவனின் தீர்ப்பா?
போர், பஞ்சம், பூகம்பம், வெள்ளம்-
பூமி தவணை முறையில் மரிக்கிறதா?
ஜனனமும் மரணமும் ஒரு வட்டம்தானே?
அழிவுக்குப் பின்
வேறோர் வானமும் இன்னொரு பூமியும்
பிளந்து தோன்றுமா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
இதை அறிந்திருந்தால்
ஆன்மாவை உருக்கி
உயிரைத் திரியாக்கி
உடலை நெய்யாக்கி
நூற்று அறுபது நூல்களை
எழுதாமல் இருந்திருப்பேன்

சித்தோர்கர் கோட்டை
மனதில் எழுகிறது
அக்பரின் ஐம்பதாயிரம் படைகள்
ராஜபுத்திரரின் ஐந்தாயிரம் உயிர்கள்.
ஐந்து மாதங்கள்
வாட்களுக்கும் பீரங்கிகளுக்கும்
எதிராக நின்றார்கள்
பெப்ரவரி 23, 1568,
ஐந்தாயிரம் பெண்களும் குழந்தைகளும்,
தீயில் இறங்கினர்
ஐந்தாயிரம் ஆண்கள் வெறும் கம்புகளுடன்
போரிட்டு மடிந்தார்கள்
அந்த மானுடரின் கதைகளென்ன?
அவர்களின் கண்ணீர்
எந்த ஆற்றில் பாய்ந்தது?
தீயில் மாய்ந்த உயிர்களெல்லாம்
என்ன நினைத்தன?
அக்பரின் அரண்மனையில்
அடிமையாய் வாழ்வதைவிட
சாம்பலாக மறைவது மேலா?
அபுல் ஃபாஸல் எழுதினார்
சித்தோர்கர் ஒரு சுடுகாடு
அக்பரின் புகழுக்கு அஞ்சலி.
ஐந்தாயிரம் உயிர்கள்
தீயில் எரிந்து சாம்பலாவது
எப்படி ஒரு அரசனின் பெருமையாகும்?
கண்ணீரின் கறையின்றி
இப்படி ஒரு கவி எழுதலாகுமா?

என் தேசத்தில்,
குப்பை கூட்டுபவனுக்கு
ஊதியம் ஏழாயிரம் ரூபாய்,
நடிகனுக்கு நூற்றி ஐம்பது கோடி.
கலை இலக்கியம்
அறியாத கும்பல்
சினிமாவும் கிரிக்கெட்டும்
பணமும் மட்டுமே அறிந்த கூட்டம்
மனித விலங்குகள் என்கிறான் பர்த்ருஹரி

இந்த உலகம் உண்மையா?
அல்லது
ஞானிகள் சொல்வது போல,
கடவுளின் கனவா?
அல்லது
அந்தக் கனவின் நிழலா?

ஒரு கோப்பையில்
சீலே வைனை நிரப்புவேன்
காற்றில் கரைகின்றன
எனது சொற்கள்.