தக் லைஃப் – விமர்சனம்

ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம்.

மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது.  படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன.  சில உதாரணங்களைத் தருகிறேன்.

அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு வயது என்று வைத்துக்கொள்லலாம்)  வளர்க்கிறார்.   இருபது இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்திருப்பார்.  அமரனுக்கு ஏழு வயது என்றால் அப்போது சக்திவேலுக்கு முப்பத்திரண்டு இருக்கலாம்.  அப்படியானால் அது தந்தை மகன் உறவுதானே?  ஆனால் படத்தில் அண்ணன் – தம்பி என்று வருகிறது.  அதற்கு ஒரு ஆபாசமான காரணம் இருக்கிறது.  சக்திவேலின் காதலியான இந்திராணியை (த்ரிஷா) அமரனும் காதலிக்கிறார்.  தந்தை மகன் உறவு என்றால் சித்தியைக் காதலிப்பது ஆசாரமல்ல, தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்று அண்ணன் தம்பி உறவு என்று நம் காதில் பூ சுற்றுகிறார்கள். 

இதற்கு ஒரு மூலக்கதை இருக்கிறது.  சக்திவேலும் இன்னொரு தாதாவும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.  அதில் இன்னொரு தாதா போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறான்.  துப்பாக்கிச் சூடு.  அதில் சிறுவன் அமரனைத் தூக்கி வைத்துக்கொண்டு தப்பிக்கிறார் சக்திவேல்.  அப்போதுதான் அமரனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார்.  அந்தச் சம்பவத்தில் அமரனின் நாலு வயது தங்கை சந்திரா காணாமல் போய் விடுகிறாள். உன் தங்கையைக் கண்டு பிடித்துக் கொடுப்பது என்று சொல்லும் சக்திவேல் பல டான்ஸ் பப்களில் தேடி இந்திராவைக் கண்டு பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து தன் காதலியாக வைத்துக்கொண்டு விடுகிறார். 

இந்த இந்திராதான் அமரனுக்கும் சக்திவேலுக்கும் முட்டிக் கொள்வதற்குக் காரணம்.   

சக்திவேல் ஊரே நடுங்கும் தாதா.  அப்படிப்பட்டவரின் காதலியான இந்திராணியிடம் எவ்வளவு சொத்தும் பணமும் இருக்க வேண்டும்?  ஆனால் சக்திவேல் இறந்து விட்டார் என்று நம்பப்படும் காலகட்டத்தில் அமரன் இந்திராணியிடம் “நீ என்னோடு வந்து விடு, இல்லாவிட்டால் போய் விடு” என்று சொல்லும் சமயத்தில் இந்திராணி ஏதோ ஒரு அனாதையைப் போல “நான் எங்கே போவது?” என்று பசப்புகிறாள். 

எப்படி இருக்கிறது கதை?  தான் காதலித்த சக்திவேல் இறந்ததாக நம்பப்படும் சமயத்தில் தன்னைப் பெண்டாள நினைக்கும் அமரனை இந்திராணி செருப்பால் அல்லவா அடித்திருக்க வேண்டும்?  அப்படி நடக்கவில்லை.  சக்திவேல் எப்போது தொலைவார், இன்னொருத்தனிடம் போகலாம் என்று காத்துக்கொண்டிருப்பவளைப் போல் நடந்து கொள்கிறாள் இந்திராணி.  நம்பவே கேவலமாக இருக்கிறது. 

இப்படித்தான் படம் முழுவதுமே காதில் பூ சுற்றுகிறார்கள்.  இன்னொரு காட்சி.  சக்திவேல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.  வெளியே வந்ததும் வீட்டுக்குப் போகாமல் நேராக காதலி வீட்டுக்குப் போகிறார்.  அங்கே ஒரு வாரம் ஜாலி பண்ணி விட்டு மனைவியிடம் செல்கிறார்.  அங்கே மனைவி ஜீவா (அபிராமி) தன் கணவன் ஒரு வாரம் காதலி வீட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்து, ஏதோ தன்னை விட்டுவிட்டுத் தனியாக சினிமாவுக்குப் போய் வந்தவனோடு ஊடல் கொள்வது போல் சிணுங்குகிறார்.  யோவ், நீங்களெல்லாம் என்ன சங்க காலத்திலா வாழ்கிறீர்கள்?  சங்க காலத்துத் தலைவிதான் வேசி வீட்டுக்குப் போய் வந்த கணவனோடு அப்படி ஊடல் கொள்வதாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன. 

நிஜத்தில் என்ன நடக்கும் தெரியுமா சினிமா உலக லெஜண்டுகளே?  துடைப்பக்கட்டையால் கணவனைப் பின்னி எடுத்து விடுவார்கள்.  அல்லது, விஷம் வைத்துக் கொன்று விடுவார்கள்.  மணி & கமல், நீங்கள் இருவரும் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?

எந்தப் பாத்திரத்திலும், எந்தக் காட்சியிலும் பார்வையாளர்கள் ஒன்றவே முடியவில்லை என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன்.  சக்திவேலின் அண்ணனுக்கு (நாஸர்) சக்திவேலின் மீது பொறாமை.  அதேபோல் சக்திவேலின் அடியாட்கள் நாலைந்து பேருக்கும் அவர் மீது எரிச்சல்.  சக்திவேல் கைலாஷ் (இமயமலை கைலாஷ்) போகிறார்.  அங்கே ஒரு மலை உச்சியில் வைத்து அந்த நான்கு பேரும் – அடியாட்களும் அண்ணனும் – சேர்ந்து.  நேருக்கு நேராகவே சண்டையிட்டு, துப்பாக்கியால் சுட்டு, என்னென்ன எழவோ செய்து அவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.  போட்டுத் தள்ளும் முயற்சியின்போது அமரனும் வந்து விடுகிறான். அவன்தான் இந்த சதித்திட்டம் போட்டதே.  அவன்தான் சக்திவேலை மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விடுவது. 

இடைவேளை ஸ்லைட் காண்பிக்கப்படுகிறது. 

மீதிக் கதையை நீங்களே யூகித்து விடலாம்.  எந்த த்ரில்லும் கிடையாது.  மீதிக் கதையை யூகித்து விட்டீர்களா?

கீழே விழுந்த சக்திவேல் பிழைத்து எழுந்து வந்து எல்லோரையும் பழி வாங்குகிறார். 

அண்ணன்மாரே, இந்தக் கதை எந்த லெஜண்டின் கற்பனையில் உருவானது?

இன்னொரு பைத்தியக்காரத்தனம், கேளுங்கள்.  அமரன் தன்னை இருபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்த தன் தந்தை போன்ற சக்திவேலை ஏன் தீர்த்துக்கட்ட முயல்கிறார் தெரியுமா?  சக்திவேலின் அண்ணன் அமரனிடம் “உன் தந்தையைக் கொன்றது சக்திவேல்தான்” என்கிறார்.  உடனே அமரன் அதை நம்பி சக்திவேலைக் கொலை செய்ய முயல்கிறார். 

டேய், டேய், டேய், காதில் பூ சுற்றுவதற்கும் ஒரு அளவில்லையா லெஜண்டுகளா?  ஏன், அமரனுக்கு சுயபுத்தியே இல்லையா?  யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் முட்டாப்பயலா அமரன்?  கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே இப்படித்தான் வருகின்றனர்.

ஊரே நடுங்கும் தாதாவான சக்திவேல் இப்படித்தான் தன்னைக் கொலை செய்யத் திட்டமிடும் அடியாட்களைத் தன் வலது கரமாக வைத்துக்கொண்டு திரிவாரா?  அமரனைப் போலவே சக்திவேலுக்கும் ஆட்டாம்புழுக்கை அளவுக்குக் கூட மூளை இல்லை என்பது போலவே இருக்கிறது கதையமைப்பு.  இதற்கிடையில் ஒரு அடியாள் எப்போது பார்த்தாலும் எல்லா அடியாட்களிடமும் சக்திவேல் பற்றி பொல்லாங்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான்.  அமரன் உட்பட.  இது சக்திவேலுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று? 

சக்திவேல் ஒரு ‘தக்’ என்கிறார்கள்.  ஆனால் அவரோ ரமண மகரிஷி மாதிரியே நடந்து கொள்கிறார்.  ஒரே ஒரு காட்சியில் இந்திராணியிடம் லவ்ஸ் பண்ணும்போது மட்டுமே ரமணராக இல்லாமல் நவீன கால சாமியாராக மாறுகிறார்.   கடைசி காட்சியில் சக்திவேல் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாராக மாறி விடுகிறார்.  தாடிதான் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கிறது.  அது ஒன்றுதான் வித்தியாசம்.

படத்தில் ஒரே ஒரு ரிலீஃப் என்றால் முத்தமழை பாடல் இல்லாததுதான்.  எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூலில் படித்தேன்.  எனக்கு எம்.எஸ். பற்றி ஒரு நீண்ட நாள் கேள்வி இருந்தது.  இவர் ஏன் காமத்துப் பால் கீர்த்தனைகளை பக்தி ரசமாகப் பாடுகிறார் என்று.  அந்த நூலில்தான் என் சந்தேகம் தீர்ந்தது.  எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் ஒரு உத்தரவு போட்டாராம்.  “நீ எப்போதுமே – எந்தக் கீர்த்தனையாக இருந்தாலும் – பக்தி ரசம் ததும்பவே பாட வேண்டும்” என்று. 

நம் சின்மயியும் அதே பாணியில் முத்த மழை பாடலை பக்தி ரசம் ததும்பப் பாடியதை தக் லைஃப் விழாவில் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.  நல்ல காலம்.  படத்தில் அந்தக் கொடுமை இல்லை.  (கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு போன்ற பாடல்களைக் கொடுத்த ரஹ்மானும் மணி ரத்னமுமா இப்படி முத்த மழை போன்ற பக்திப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்!)

மணி ரத்னமும் கமல் ஹாசனும்தான் திரைக்கதையாம்!  ஒரு படத்தில் திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக விளங்கும்.

சமீபத்தில் செக்டார் 36 என்று ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன்.  தெரிந்த கதை.  தெரிந்த சம்பவங்கள்.  தெரிந்த முடிவு.  எல்லாமே செய்தித்தாள்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்பட்ட சம்பவங்கள்.  ஆனாலும் படத்தில் ஒரு நொடி கூட தொய்வு இல்லை.  முப்பதுக்கு மேற்பட்ட சிறார்களை வெட்டிக் கொன்ற சீரியல் கில்லரான ஒரு இளைஞன் போலீஸிடம் தன் தரப்பு நியாயத்தை விளக்குகிறான்.  அப்போது அவன் பேசும் வசனம், அப்போது அந்த நடிகனின் நடிப்பு இரண்டும் உலகத் தரம். அந்த நடிகரின் பெயர் விக்ராந்த் மாஸே. 

செக்டார் 36 திரைப்படக் கலையைக் கற்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது.  ஏனென்றால், இதன் கதை, சம்பவங்கள், முடிவு எல்லாமே செய்தித்தாள்களில் விலாவாரியாக அலசப்பட்டது.  இருந்தாலும் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும், நடிப்பும், வசனமும்.  நம்முடைய லெஜண்டுகள் பழைய பெருங்காய டப்பாக்களாகி விட்டார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், தக் லைஃப் போன்ற ஒரு கொடூரமான தலையிடி படத்தை சமீப காலத்தில் பார்த்ததில்லை.  இன்னொரு குறிப்பும் தர வேண்டும்.  இந்தப் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தை மாமனாரின் இன்ப வெறி போன்ற பிட் படங்களோடு ஒப்பிடுகிறார்.  இந்திராணி விஷயத்தில் அமரன் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால், மாறன் சொல்வது சரிதான்.  சந்தேகமில்லை, இது ஒரு மாமனாரின் இன்ப வெறி படம்தான்.  என்ன, கொஞ்சம் ஆடம்பரமாக எடுத்திருக்கிறார்கள்.