மானுடரோடு பேசுவதில் மனம் களைத்து
அந்தக் கானகத்தின் மௌனத்தில்
ஒரு பாறையின் குளிர்ந்த தோளில்
என் தனிமையை சாய்த்திருந்தேன்.
அப்போது ஒரு அணில் குஞ்சு
இலைகளினூடாக நடனமாடியபடி
என்னருகே வந்து
அங்கே இறைந்து கிடந்த சொற்களை
ஒளிரும் முத்துக்களென
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து
அதன் மென்மையான வாலால் துடைத்து,
என் முன்னே அடுக்கியது.
நான் கேட்டேன், “எதற்கு இந்த முயற்சி,
என் சொற்களை நீ ஏன் தேடுகிறாய்?”
அது சிரித்து, “உன் மௌனம் பேச,
இது எனது சிறிய காணிக்கை” என்றது
நான் நன்றி சொல்லும் முன்
நிழலென உருண்டு வந்தவொரு
காட்டுப்பூனை அந்த அணிலைக்
கவ்விக்கொண்டு கானகத்தின்
இருளில் மறைந்தது
நான் மெல்ல மண்டியிட்டு,
அந்த சொற்களை ஒவ்வொன்றாய்த் தொட்டு,
என் உள்ளங்கையில் அணைத்து,
பாக்கெட்டில் அவற்றை பத்திரமாய் மூடினேன்.
அணிலின் குரூர மரணம்,
என் தனிமையை அதிகமாக்கியது
ஆனால்,
அது என்னுடன் மெல்ல உரையாடிய
நொடிகளில்
அதன் சிரிப்பில்
அதன் கண்களில் மின்னிய ஒளி
என்னை விட்டு என்றும் அகலாது
அந்த ஒளியை
என் மனதின் மூலையில் அணைத்தபடி
கானகத்தின் இருளை விட்டு
மெல்ல நடக்கத் தொடங்கினேன்