பிடித்தவற்றின் பன்மை

எனக்கு

பெண்களை விட ஆண்கள்
ஆண்களை விட பிராணிகளின் தனித்துவம்
பிராணிகளை விட ஞானிகளின் மௌனம்
ஞானிகளை விட கடலின் பிரம்மாண்டம்
கடலை விட மலைகளின் தனிமை,
மலையை விட வனங்களின் புதிர்கள்
வனத்தில் அமர்ந்து, நிலவொளியில் குடிப்பது

நான் அன்பு செலுத்துபவர்களை விட,
என் மீது அன்பு கொள்வோர்
அன்பின் பெயரால் அறிவுரை வழங்குபவர்களை விட,
அமைதியாய் அனுகூலம் செய்பவர்கள்
திருமணச் சிறையில் ஒடுங்காத பெண்கள்
குடும்ப அடிமைகளாய் ஆகாத ஆண்கள்
(அப்படிப்பட்ட ஆணை, இரண்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன்.)

வெற்றிலைப் பாக்கின் காரம்
கருவாட்டுக் குழம்பின் கவுச்சி
சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிரபஞ்ச லயம்
ஹார்ட் ராக்கின் கிளர்ச்சி
பியானோவின் மென்மை
இரவு முழுவதும் குடித்தபடி உரையாடி,
விடியலின் முதல் ஒளியில் உறங்கச் சென்று,
மாலையின் மென்மையில் கண் விழிப்பது

கூந்தலில் முகம் புதைத்து முத்தமிடுவது
பின்கழுத்தில் உதடுகளால் கவிதை எழுதுவது
உடலில் மறைந்து கிடக்கும் இன்பங்களை ஆராய்வது
கலவியை விட வாய் மைதுனம்
மூடர்களை விட புத்திசாலிகளின் ஒளி
நேர்வழிச் சிந்தனையை விட கோணல் மாணல் கற்பனைகள்
பணத்தைச் சேமிக்காதவர்களின் தாராளம்
மனப்பிறழ்வின் மர்மம் தாங்கிய பெண்கள்

மாடுகளின் அமைதி
யானைகளின் மெது நடை
மாதங்களில் மார்கழி
தேசங்களில் ஜப்பான்
ஜப்பானில் சமைக்காத மீன் உணவு சுஷியின் பச்சைத்தன்மை
சாக்கேயின் தீக்கனல் ருசி
மழையை விட குளிர்
குளிரை விட பனிப்பொழிவின் அற்புதம்

நேரம் தவறாதவர்களின் ஒழுங்கு
கருப்பு நிறத்தின் ஆழம்
வாக்குறுதிகளை விட அமைதியின் ஆறுதல்
பேச்சை விட மௌனத்தின் மொழி
கவிஞர்களை விட, உடலை விற்பவர்களின் உண்மை
நட்சத்திரங்களோடு உரையாடுபவர்கள்
பிராணிகளோடு வாழ்பவர்கள்

ஒழுங்கை விட குழப்பத்தின் அழகு
வாசனைத் திரவியங்களின் மயக்கம்
குழந்தைக பெறாதவர்களின் சுதந்திரம்
ஆவிகளோடு உரையாடி, உலகின் மர்மங்களைத் தேடுபவர்கள்
மற்றும்
நான்.

ஆனால், இவை அனைத்தையும் விட,
ஒரு மதுக்கூடத்தில் தனியே அமர்ந்து,
இவ்வுலகின் அழுக்கையும் அழகையும்
ஒரு கோப்பையில் நிரப்பி,
நான் யார், இவை எதற்கு என்று
கேள்வி கேட்காமல் இருப்பது பிடிக்கும்.

This poem was inspired by Possibilities by Wisława Szymborska.