அன்புள்ள சாரு,
ஊருக்கு வந்ததும் உங்கள் சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் நூலை எடுத்து வாசித்தேன். முதல் கவிதையே என் நினைவுகளை எங்கெங்கோ எடுத்துச் சென்றது; புதிய சிந்தனைகளைத் திறந்து விட்டது.
ஒரு விஷயம் உடனே புரிந்துவிட்டது.
இது Lang Leav கவிதைகள் போல அல்ல. Lang Leav என்ற கவிஞரின் நூல்கள் இன்று விமான நிலைய புத்தகக் கடைகளில் கவர்ச்சியாக அடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஒரு பக்கத்தில் ஒரு கவிதை. மூன்று அல்லது நான்கு வரிகள்தான். எல்லாமே மிகத் தட்டையான கவிதைகள். விலையோ மிக அதிகம். “என்னடா இது பித்தலாட்டம்?” என்று நான் யோசித்திருக்கிறேன். பத்து நிமிடத்தில் வாசித்து, கடந்துவிடக் கூடியவை.
ஆனால் சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் அப்படியானது அல்ல.
இது வேறு மாதிரி.
இந்த நூலில் உள்ள தேன்சிட்டுக் கவிதைகள் காட்டும் கவிதைத் தருணங்களை வியந்து, ரசித்து, புரியாமல் குழம்பி, புரிந்து சிலிர்த்து — ஆனாலும் கவிதைகளுக்குள் சிக்காமல் தப்பித்துத் தப்பித்து வந்தேன். ஆனால் இந்த நூலின் பதினான்காம் கவிதையில் ஆழ்ந்து விட்டேன்.
இதோ, தாசி வீடு எனும் கவிதையைப் பற்றி எனக்குள் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.
கவிதை என்றால் என்ன என்பதைக் குறித்து என்னிடம் தெளிவான விளக்கம் இல்லை. ஆனால் கவிதை எனக்குள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு சிறிய எதிர்பார்ப்பு உண்டு.
கவிதை எனக்குள் ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
சாருவின் இந்தக் கவிதை அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாகப் பூர்த்தி செய்து விட்டது. பலருக்கும் இதே போன்ற சூழலை இந்தக் கவிதை உருவாக்குமா எனத் தெரியவில்லை. அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
கவிதை கேள்வி கேட்டலின் பதற்றத்தில் தொடங்குகிறது. இது பதில் கிடைக்காத பதற்றம் அல்ல; பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் பதற்றம்.
ஏன் உண்மைகள் கேள்விகளுக்குப் பயப்படுகின்றன என்ற பதற்றம்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உண்மை உள்ளுக்குள் இருந்தும், அந்தக் கேள்விகள் தரும் பதற்றம்.
இந்தக் கவிதையில் பேசப்படும் “உண்மை” அறிவியல் உண்மை அல்ல. அது நாம் யார், எதை விரும்புகிறோம், நமது இயல்பு எது என்பவற்றைப் பற்றிய உள் உண்மை.
கேள்விகள் பதற்றமடையச் செய்கின்றன. ஏனென்றால் கேள்விகள் நம்மைப் புரிந்து கொள்ள கேட்கப்படுவதில்லை; நம்மைப் பற்றி தீர்ப்பு எழுதவே கேட்கப்படுகின்றன.
கேள்விகள் உண்மையை அல்ல; அழகான பதில்களை மட்டுமே விரும்புகின்றன. பல கேள்விகளுக்கு உண்மை தேவையில்லை; தங்களுக்கு ஏற்ற பதிலை உறுதிப்படுத்தினால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
எல்லோருக்கும் உண்மை வேண்டும். இயல்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆனாலும் உண்மை வெளியில் வராமல், ரகசிய அறைக்குள் பதுங்கிக் கொள்கிறது. வெளியில் பொய்கள் அரங்கேறுகின்றன.
“தாசி வீடு” என்ற தலைப்பு இந்தக் கவிதையின் முக்கிய அடுக்காகிறது. தேவைப்படும் போது “உண்மை” என்பது சொல்லாகப் பயன்படுத்தப்படும், புனிதப்படுத்தப்படும், ஆராதிக்கப்படும்; ஆனால் உண்மையை உண்மைக்காக வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை.
இந்தக் கவிதை தத்துவம் அல்ல. ஏனென்றால் தத்துவம் கேள்விகளை உருவாக்குகிறது; பதில்களைக் கட்டமைக்க உதவுகிறது.
இது ஆன்மீகமும் அல்ல. ஆன்மீகம் பதில்களுக்கு அஞ்சும் உண்மைகளோடு வாழ கற்றுத் தரும் ஒரு முயற்சி.
இது கவிதை. அப்படியென்றால் கவிதையை தத்துவத்திடமிருந்தும் ஆன்மீகத்திடமிருந்தும் காப்பாற்ற கவிஞர் என்ன செய்ய முடியும்?
முரணை சொல்லி ரசிக்க வைக்க முடியும்.
“வேறு என்ன செய்ய முடியும்?” என்ற சலிப்புடன் முடிவுரை எழுத முடியும்.
“என்ன ஒரு இழிநிலை!” என்று வாழ்க்கையின் இயலாமையின் மறுபக்கத்தை காட்டி கலங்கடிக்க முடியும்.
“என்ன சமூகம் இது?” என்று காறி உமிழ்ந்து கோபத்தோடு முடிக்கவும் முடியும்.
ஆனால் சாருவோ வேறு ஒரு முறையை கொண்டு வருகிறார்.
“ஏன்? ஏன்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தால், அந்தக் கேள்வியையே தெய்வத்திடம் எடுத்துச் சென்றால், மனிதனைப் போல தெய்வத்தையே பதற்றமடையச் செய்கிறது என்று சொல்லி,
உண்மை, கேள்வி, பதற்றம் — இவற்றை வேறொரு தொனிக்குள் மாற்றுகிறார்.
“என்னை யாராவது கேள்வி கேட்டாலே செம கடுப்பாகுது.
நான் சொல்லும் உண்மையை பதிலா ஏத்துக்க முடியுமா ன்னு தோணுது.
அது ஏன்னு போயி கடவுள்கிட்ட கேட்டா, அவரும் கடுப்பாகிட்டாரு!”
என்ற இந்த நக்கலை
ஒரு கவிஞனால் மட்டுமே
உருவாக்க முடியும்.
இது தீர்க்க வேண்டிய பிரச்சனை இல்லை.
காப்பாற்ற வேண்டிய ரகசியமும் அல்ல.
உயர்த்த வேண்டிய நெறியும் அல்ல.
“அதுபாட்டுக்கு இருக்கட்டும். அது இல்லாமலும் இருக்கட்டும் ஆனா நாம நாமளா வாழ்ந்துட்டுப் போவோம்”
என்று இந்தக் கவிதை எனக்குச் சொல்கிறது.
கவிதையை கட்டி, அதை உடைக்கும் அந்த இறுதி வரிகள், இந்தக் கவிதையை ஒரு ஞானக் கவிதையாக மாற்றி விடுகின்றன.
நன்றி.
நிர்மல்
