நாகூரில் ஒரே ஒரு தட்டச்சுப் பயிற்சி நிலையம் உள்ளது. அதில் இங்க்லீஷ் டைப்பிங் கற்றுக்கொண்டு லோவர் (அப்போது லோவர் என்ற உச்சரிப்பு தெரியாததால் லோயர் என்றே சொல்வோம்) தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்கள் ஒரே ஒருத்தர்தான் இருந்தார். அவர் அந்தப் பயிற்சி நிலையத்தை நடத்துபவரின் புதல்வி. 1970களின் முற்பகுதியைச் சொல்கிறேன். அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளாக அங்கே வேறு யாருமே லோவர் பரீட்சையில் தேர்வு பெற்றதில்லை. பத்து பன்னிரண்டு முறை தேர்வுக்குச் சென்று கொண்டேயிருப்பார்கள்.
நானும் என் தங்கையும் முதல் முயற்சியிலேயே தேர்வில் தேறினோம்.
ஊரில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் என்ற பத்திரிகை வராது. அப்படி ஒரு பத்திரிகை இருப்பதே ஊரில் எனக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. என் நைனா நாகப்பட்டினம் போகும்போது வாராவாரம் வாங்கி வருவார்கள். அதில் ஒருமுறை தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் நாலாவது பிரிவுக்கு (குமாஸ்தா வேலை) விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பெற்றிருந்தால் போதும். (இப்போதைய பதினொன்றாம் வகுப்பு)
தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷனை டி.என்.பி.எஸ்.சி. என்று சுருக்கமாக அழைப்போம். நாகப்பட்டினம் வட்டாரத்திலேயே (இதை கீழத்தஞ்சை என்று அழைக்கப்படும்) யாரும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றதில்லை.
நானும் சுமதியும் (என் தங்கை) விண்ணப்பித்தோம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் சமயத்தில் “சுமதி, உனக்கு டிபார்ட்மெண்ட் வேண்டும்?” என்று கேட்டேன். வீட்டில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிறகு நானே ட்ரஷரீஸ் என்று போட்டு நிரப்பி, எனக்கு சிறைத்துறை என்று போட்டு நிரப்பி அனுப்பி வைத்தேன்.
தேர்வு எழுதினோம். ஒரே முயற்சியில் இருவரும் தேர்வானோம். இருவருக்கும் நாங்கள் கேட்ட துறையே கிடைத்தது.
இளையராஜாவின் முதல் பாடலைக் கேட்டேன். எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பக்கத்திலிருந்த நண்பரிடம் “எனக்குப் பிடிக்காவிட்டாலும் இனி இவர்தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறார்” என்றேன்.
ரஹ்மான் வந்தபோது இவர் உலக அளவில் பிரபலமாவார் என்றேன். ப்ரே ஃபர் மீ பாடல் வந்தபோது இவர் ஆஸ்கர் வாங்குவார் என்று எழுதினேன். அப்படி எழுதுவது அப்போது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஆனால் அடுத்த ஆண்டே ஆஸ்கர் வாங்கினார்.
திமுக 25 தொகுதிகளைப் பெறும் என்று துக்ளக்கில் எழுதினேன். சோ என்னைக் கிண்டல் செய்தார். “என்ன சார், அதிமுககாரரே இப்படிச் சொல்ல மாட்டார், நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? நான் மாற்றவில்லை. அப்படியே போடுகிறேன்” என்றார். 21 தொகுதிகள் வென்றது திமுக. விகடனில் 180 தொகுதிகள் ஜெயிக்கும் என்று எழுதியிருந்தார்கள். சோ 100 தொகுதி என்று எழுதினார்.
ஓர்ஹான் பாமுக்குக்கு இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் நோபல் பரிசு கிடைக்கும் என்று அமிர்தா பத்திரிகையில் எழுதினேன். கட்டுரை அச்சுக்குப் போகும்போது அவருக்கு நோபல் விருது கிடைத்த அறிவிப்பு வந்தது. அதை அடிக்குறிப்பில் குறிப்பிட்டார் அமிர்தா ஆசிரியர்.
இதுபோல் நூறு சொல்லலாம்.
இப்போது சொல்கிறேன். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஸ்ரீ இந்தியாவில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியராகத் தெரிய வருவாள். காரணம் என்னவென்றால், நானும் அவளும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் ஒரு அத்தியாயத்தை (12000 வார்த்தைகள்) இரண்டு பிரசித்தி பெற்ற நாவலாசிரியர்களிடம் கொடுத்தேன். இருவருமே இது இந்திய ஆங்கில இலக்கியத்துக்குப் புதியது என்றார்கள். ஒருவர், இந்த எழுத்து சாமுவேல் பெக்கட்டை நினைவுபடுத்துவதாகக் கூறினார். நானும் பெக்கட் படித்ததில்லை. ஸ்ரீயும் படித்ததில்லை. அதனால் பெக்கட்டின் மர்ஃபி என்ற நாவலை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அந்த 12000 வார்த்தைகளில் 10000 வார்த்தைகளை எழுதியது ஸ்ரீதான்.
அதனால் ஸ்ரீ தன் படிப்போடு நாவலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதுவும் நிச்சயம் நடக்கும்; என்னுடைய வார்த்தைகள் எப்போதும் நடந்து வந்திருப்பதைப் போலவே.