உங்கள் மகளைப் பார்த்து விட்டீர்களா ? ( தொடர்ச்சி)

 

னனியைச் சந்தித்த போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்ல மறந்து போனேன்.

இதுவரை என்னுடைய சாப்பாட்டு மேஜையில் என்னைத் தவிர வேறு யாரும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டதில்லை. விஷாலோடு ஓரிரு முறை சாப்பிட்டு இருக்கிறேன். என் குடும்ப உறுப்பினர்களோடு அப்படிச் சாப்பிட்டதில்லை. அவந்திகா , கார்த்திக் இருவரின் சாப்பாட்டு நேரமும் என்னுடைய சாப்பாட்டு நேரமும் ஒத்து வராது என்பதே காரணம். என்னுடைய நேரம் ஏழரை , பனிரண்டரை , ஏழரை. அவர்களுடைய நேரம் பதினொன்றரை , மூன்றரை , பத்தரை. ' இப்படி இரண்டு ஹிப்பிகளோடு வாழ வேண்டியிருக்கிறதே ' என்று புலம்பியபடி "ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி அனாதையைப் போல் தினம் தினம் தனியாகச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பேனா ?" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவேன்.

அதோடு என் அம்மாவைத் தவிர வேறு யாரும் எனக்கு சாப்பாடு பரிமாறியதும் இல்லை. எனக்கு யாரேனும் சாப்பாடு பரிமாறினால் அது பிடிக்கும். அவந்திகாவிடம் கேட்டால் ' சமைப்பதே பெரிய விஷயம் ; இதில் பரிமாறவும் வேண்டுமா , போய்யா ' என்று சொல்லி விடுவாள்.

அன்று ஜனனி என் வீட்டுக்கு வந்த போது அவந்திகா அலுவலகம் சென்றிருந்தாள். பனிரண்டரைக்கு எனக்குப் பசி மணி அடித்தது.

ஜனனியிடம் "சாப்பிடலாமா ?" என்று கேட்டேன். "ஓ , சாப்பிடலாமே" என்றாள் உடனடியாக. "பொதுவாக எத்தனை மணிக்கு சாப்பிடுவாய் ?" என்று கேட்டேன். "பனிரண்டரைக்குப் பசிக்கும் ; ஆனால் இரண்டு மணிக்குத்தான் அந்தப் பிசாசு சமைத்து முடிக்கும்" என்றாள்.

முதல் முதலாக எனது சாப்பாட்டு மேஜையில் இன்னொரு மனித ஜீவி. எனக்குச் சாப்பாடு பரிமாறி விட்டுத் தானும் போட்டுக் கொண்டாள் ஜனனி.

இப்படிப் பல விஷயங்களில் என்னைப் போலவே இருந்தாள் அந்த அழகு தேவதை.

* * *

என் மகள் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒரு பக்கம் இருக்கும். எனக்கு அவ்வப்போது வருமே ஆபாச வசை கடிதம், அதைப் போல் இருந்தது அந்தக் கடிதம். நீ ஒரு குடிகாரன், ஸ்த்ரீ லோலன், ஆபாச எழுத்தாளன், உன்னுடைய ஸீரோ டிகிரி ஒரு போர்னோ (இரண்டு பக்கத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை), நீ ஒரு பெண்ணை ரேப் பண்ணியிருக்கிறாய் என்று பல விதமான புதிய செய்திகள் இருந்தன அதில்.

அவள் பெயரில் வேறு யாரோ அனுப்பிய மெயில் அல்ல அது. விஷயம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் அவள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினாள். என்னைச் சந்திக்கக் கூட முயற்சி செய்யாமல் மகள் மகள் என்று என்ன ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அதில் கண்டிருந்தது.

நான் என்னுடைய நிலையை விளக்கிப் பதில் எழுதினேன். அதாவது, மகளைப் பார்க்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போது “நீர் உமது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இருக்கிறீர் என்று தெரிகிறது. நீர் விரும்பினால் இது பற்றி உமது மகள் நீதி மன்றத்தில் சாட்சி கூறத் தயாராக இருக்கிறாள் ” என்று பதில் நோட்டீஸ் வந்தது.

அந்த நிமிஷத்திலிருந்தே என் மகளைச் சந்திக்கும் ஆசையை விட்டு விட்டேன். சிறைச்சாலைக்குப் பயந்து அல்ல; அப்படி சாட்சி சொன்னால் பின்னாளில் என் மகள் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகலாம்; அல்லது, மனப் பிறழ்வு ஏற்பட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்படலாம்.

இப்படியாக என் மௌனத்தின் மூலம் என் மகளின் வாழ்வையும், உயிரையும் நான் காப்பாற்றினேன்.

இதையும் அவளிடம் சொன்னேன். “நல்ல வேளை; அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து நான் அப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ” என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள். அந்தக் குறுஞ்செய்தி இன்னமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

தான் என்னைத் தொடர்பு கொண்ட விஷயம் பற்றி யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்றும், எதிலும் எப்போதும் எழுதி விடவும் கூடாது என்றும் சத்தியம் வாங்கியிருந்தாள்.

அதனாலேயே இது பற்றியெல்லாம் நான் வாயையே திறக்காமல் இருந்தேன். தினம் ஒரு 50 குறுஞ்செய்திகள் வரும். இப்படியெல்லாம் அனுப்பினால் பிறருக்குத் தெரிந்து போய் மீண்டும் நம்முடைய தொடர்பு விட்டுப் போகும் என்று எச்சரிக்கை செய்தேன். என் அம்மா ஒரு தெய்வம் என்று பதில் வந்தது. வாயை மூடிக் கொண்டேன்.

சன் தொலைக்காட்சியில் தன்னுடைய பேட்டி வருவதை ஒரு டஜன் தடவை நினைவு படுத்தினாள்.

இடையில் ஒரு குறிப்பு: என்னை ஒரு முறை கூட அப்பா என்னை அப்பா என்று அழைக்கவில்லை. அது பற்றி நான் கவலையும் படவில்லை. இது பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையை நான் தாண்டியிருந்தேன்.

பிறகு திடீரென்று குறுஞ்செய்தி நின்று போனது. நானும் தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேற்கண்ட ஆபாச வசைக் கடிதம் அவளிடமிருந்து வந்தது.

இப்படி அவளிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு இப்போது இதை ஏன் பகிரங்கமாக எழுதுகிறேன் என்று ஒருவர் என்னைக் கேட்கலாம். சத்தியம் என்பதற்கு இரண்டு பேர் நட்புடன் இருக்கும் வரைதான் அர்த்தம் இருக்க முடியும். நட்பு முறிந்து போனால் சத்தியமும் முறிந்து போகும். அவ்வளவுதான்

இந்த ஒரு பக்கக் கடிதத்திற்கு நான் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை பதிலாக எழுதி வருகிறேன். இந்த நாவலில் வரும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் (ஒரு பெண், ஒரு ஆண், ஒரு குழந்தை) ஒரே விஷயத்தை அவரவர் கோணத்தில் சொல்வதாக அமையும். கிட்டத்தட்ட அகிரா குரஸவாவின் ரஷோமான் பாணியில் இருக்கும்.

பாபாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என் மகளின் மீது எனக்கு ஒரு தீராத பாசமும் பிணைப்பும் ஏக்கமும் இருந்தது. அது தொடர்ச்சியான உள்வலியாகவும், வேதனையாகவும் என்னைத் தின்று கொண்டேயிருந்தது. இப்போது அந்த வலி போய் விட்டது; எனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என்ற தெளிவு பிறந்து விட்டது.

* * *

6.7.2008.

7.00 p.m.