கிரிமினல்களும் இலக்கியச் சூழலும்

 

 

மணிகண்டனின் முதல் கடிதம்

Vaa.Manikandan writes:

வணக்கம்.
உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com  உயிரோசை என்னும் வார இதழ் , உயிர்மை பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் மனுஷ்ய புத்திரனின் வலைதளம் என்னும் பகுதிகளோடு இயங்குகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னொரு முகம் தங்களின் பார்வைக்கு.

நன்றி.
வா.மணிகண்டன்

* * *

சாருவின் பதில் கடிதம்

On 8/22/08, charunivedita wrote:

திரு மணிகண்டன் அவர்களுக்கு ,

நீங்கள் யார் ?  எதற்காக எனக்கு இந்த அறிவிப்பை அனுப்பித் தொந்தரவுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறீர்கள் ?  என்னுடைய இணையதளமான www.charuonline.com இல் உயிர்மை இணையதளம் பற்றிய விளம்பரம் வருவது உங்களுக்குத் தெரியுமா இல்லையா ?

அது கூடத் தெரியாமல் எனக்கு ஏன் இந்த அறிவிப்பை அனுப்பி இருக்கிறீர்கள் ? இனிமேல் நீங்கள் மெயில் அனுப்பும் போது யாருக்கு எதற்காக அனுப்புகிறோம் என்ற தெளிவுடன் அனுப்புங்கள்.

பின் குறிப்பு: இந்த அறிவிப்பை என் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் அனுப்பி விட்டீர்களா ?  இல்லையெனில் உடனே அனுப்பி வையுங்கள்.

சாரு

* * *

மணிகண்டனின் இரண்டாவது கடிதம்

திரு. சாரு நிவேதிதா அவர்களுக்கு ,

தற்போதைக்கு நான் வெட்டிப் பயல். மன்னிக்கவும். அது ஒரு குழும மின்னஞ்சல். முகவரிப் புத்தகத்தில் உள்ள பல முகவரிகளில் இதுவும் ஒன்று. மொத்தமாக தேர்ந்தெடுக்கும் போது உங்களுடையதும் வந்துவிட்டது.

ஓ! உங்களுக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அல்லவா ? மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதன் வாசகன் நான். வெறும் கடிதங்களும் , கேள்வி பதில்களும் மட்டுமே நிறைந்த ஒரு ' பாலைவனமாக ' மாறிய பிறகு அதனை நான் திறப்பதேயில்லை என்பதால் நான் உயிர்மை பற்றிய குறிப்பை பார்க்கவில்லை.

நீங்கள் இந்த சமூகத்தின்பால் கோபமும் , வெறியும் மிக்க ஒரு எழுத்தாளன் என்பதை நான் அவ்வப் பொழுது மறந்துவிடுவது என் குற்றமே. அதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தும் வெளிப்படையான மனிதர் வேறல்லவா ? ஒரு நான்கு வரி மின்னஞ்சல் குறிப்பு தங்களுக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.

பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போன்று பிறரை எந்தவிதத்திலும் துன்புறுத்தாத நாட்டில் நான் பிறந்திருக்க வேண்டும். சுரணையற்ற இந்தியாவில் அதுவும் எழுத்தாளனை கொண்டாடாவிட்டாலும் பராவாயில்லை... அவனை துன்புறுத்தி அதில் இன்பம் துய்க்கும் மானங்கெட்ட தமிழகத்தில் பிறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இனி தங்களின் மின்னஞ்சலை என் முகவரி புத்தகத்திலிருந்தே எடுத்துவிடுகிறேன்.

யாருக்கு அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறேன் என்ற மிக முக்கியமான விஷயத்தை என் மர மண்டைக்கு உணர்த்தியதை என் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கமாட்டேன்.

பின்னுக்கு பின் குறிப்பு: இது நான் குறிப்பிட்டது போன்ற குழும மின்னஞ்சல் என்பதால் அவருக்கும் ஒரு அறிவிப்பு சென்றிருக்கும். இதுதான் இந்த டெக்னாலஜியின் கொடுமை. ஒரு பைசா செலவில்லாமல் என்னால் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்க முடிகிறது. அவருக்கும் அவரது மன உளைச்சலுக்காக மன்னிப்பு கோரி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறேன்.

நன்றி

வா.மணிகண்டன்.

* * *