கருணாநிதியும் திருவள்ளுவரும்

 

டியர் சாரு

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம் ஆஸ்கர் விருது பற்றிக் கேட்ட போது ”ஆஸ்கர் பரிசு பெற்றப் படங்கள் அமெரிக்க அளவுகோலுக்கு ஏற்ப எடுக்கப் பட வேண்டியுள்ளது. நான் இந்திய அளவுகோலைப் பின்பற்றுகிறேன். என்னிடம் ISI மார்க் உள்ளது; எனக்கு எதற்கு ASI மார்க்?” என்று பதில் அளித்துள்ளார். உண்மையில் நல்ல சினிமாவை இவ்வாறு வகைப்படுத்த முடியுமா?

அன்புடன்

அரவிந்தன் சொக்கன்.

********************

அன்புள்ள அரவிந்தன்,

(உங்களை அரவிந்தன் என்று அழைப்பதா? அல்லது, சொக்கன் என்றா?)

கமலின் அந்தத் தீசல் பேட்டியை நானும் படித்தேன். சமீப சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தாலும் கிடைத்தது; நம்முடைய ஆட்கள் ஆஸ்கர் பரிசையே திட்ட ஆரம்பித்து விட்டார்கள். பொறாமை, பொச்சரிப்பு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த போது தமிழ் சினிமாக்காரர்கள் எதிர்கொண்ட விதத்தில்தான் நேரடியாகப் பார்க்க முடிந்தது. ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)

மனுஷ்ய புத்திரனுக்கு இந்த விருது கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ பொறாமைப்பட்டோ ஸ்ரீபுரம் என்ற பெயரில் ஒரு பத்தாயிரம் பக்க நாவலை எழுதி என் சகா ஜெயன் அடுத்த ஆண்டே ஒரு கலைமாமணி விருதை வாங்குவான்; எங்களுக்கு ஸ்வீடிஷ் ஸ்டாண்டர்ட் தேவையில்லை; தமிழ்நாட்டு ஸ்டாண்டர்டே போதும். இதை நிசர்கதத்த மஹராஜ் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். மேலும், இப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகள் முஸ்லீம்களைக் கவர்வதற்காக இலக்கியத்துக்குப் புறம்பான என்னென்னவோ காரியங்களைச் செய்வதாக என் ஸ்டாக்ஹோம் சகலை சென்ற மாதம் சிட்லபாக்கம் வந்திருந்தபோது குறிப்பிட்டார். ஒருவேளை மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைப் படிக்காமலேயே அவருடைய இயற்பெயரை (அப்துல் ஹமீது) மட்டும் பார்த்து விட்டு இந்தப் பரிசைக் கொடுத்து விட்டார்களோ என்னவோ? எப்படியிருந்தாலும் அப்துல் ஹமீது – ஸாரி, மனுஷ்ய புத்திரன் - அடுத்த பஸ்ஸுக்கு – ஸாரி, அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும்.”

பகடி இல்லை; நிஜமாகவே இப்படி நடக்கலாம். கமலின் வார்த்தைகளில் அந்த அளவு குரோதத்தைப் பார்க்கிறேன். சமீபத்தில் வந்த அவருடைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியை அவரது தினகரன் பேட்டியோடு சேர்த்து வாசித்தால் இன்னும் சில விஷயங்களையும் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க அளவுகோல் – இந்திய அளவுகோல் என்றெல்லாம் கலை இலக்கியத்தில் எதுவும் இல்லை. உலகம் முழுவதும் ஒரே அளவுகோல்தான். கம்பனுக்கு எந்த அளவுகோலோ அதே அளவுகோல்தான் ஷேக்ஸ்பியருக்கும். இந்த எளிய விஷயம் கமலுக்குத் தெரியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. க்ரிக்கெட் ஆட்டத்துக்கு எப்படி ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு தர நிர்ணயம் இல்லையோ அதைப் போலவேதான் கலை இலக்கியத்துக்கும்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். பிச்சாவரத்திலிருந்து நானும் சீனிவாசனும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். அவருக்கு வீடு கூடுவாஞ்சேரி அருகே. எனவே நானும் கூடுவாஞ்சேரியிலிருந்து பஸ் பிடித்து சான் தோமே வந்து விடலாம் என்று ஏற்பாடு.

“ஐயோ பஸ்ஸா; நான் ஆட்டோவிலேயே போய் விடுகிறேனே?”

ஏனென்றால் நானும் அவரும் பெங்களூரிலிருந்து வரும்போது இப்படித்தான் கூடுவாஞ்சேரியிலிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூட்டத்தில் நசுங்கி ஆஸ்பத்திரியில் சேர்ந்தது ஞாபகம் வந்தது.

உடனே சீனிவாசன் “இந்த முறை அப்படியெல்லாம் இல்லை; இது ஏ.சி. வசதி செய்யப் பட்ட சொகுசு பஸ்; டிக்கட்டே 40 ரூபாயோ என்னவோ, யாரும் ஏற மாட்டார்கள்” என்றார்.

அவர் சொன்னது போல் பஸ்ஸிலும் கூட்டம் இல்லை. ஆனால் அதில் எழுதியிருந்த வாசகம் என்னை மிகவும் துன்புறுத்தி விட்டது. ”நான் என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்றால் ஒட்டும்.” இந்தப் பொன்மொழியை உதிர்த்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அதாவது, ஒருமைப்பாட்டுக்கான பொன்மொழியாம். அப்படியானால் இவர் ’நாம்’ என்று நினைத்திருந்தால் அ.தி.மு.க., ம.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுமே தோன்றியிருக்காதே? எம்ஜியாரையும், வைகோவையும் நாம் என்று நினைக்காமல் தன் குடும்பத்தினரை மட்டுமே நாம் என்று சுயநலமாக நினைத்ததால்தானே அந்த இரண்டு பேரும் தி.மு.க.வை விட்டுப் பிரிந்து சென்று தனிக் கட்சி ஆரம்பித்தார்கள்? இல்லாமல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள கொள்கை வேறுபாடு மாதிரி இவர்களுக்குள் இருந்ததா என்ன?

சரி, அந்த சொகுசு பஸ்ஸுக்கு வருவோம். அதில் கருணாநிதியின் பொன்மொழி மட்டும் எழுதியிருந்தால் அவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அதற்குப் பக்கத்தில் ஒரு திருக்குறளும் இருந்தது. ஆக, கருணாநிதியும் திருவள்ளுவரும் ஒன்று!

அப்போது எனக்கு வேறோர் சம்பவம் ஞாபகம் வந்தது. ஃப்ரான்ஸின் தென்கோடியில் உள்ள துலூஸ் என்ற சிறு நகரில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் திருக்குறளை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து எழுதியிருந்தார்கள். பக்கத்தில் வால்டேரின் வாசகம். இப்படி துலூஸில் மட்டும் அல்ல; ஃப்ரான்ஸ் முழுவதுமே பஸ்களில் இருந்தார் நம் திருவள்ளுவர். காரணம், திருவள்ளுவர் உலகத் தரம். கருணாநிதி தமிழ்த் தரம்.

மேலும், கமல் சொல்வது போல் அவர் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றவரும் அல்ல. இந்திய அரசு கொடுக்கும் பத்ம ஸ்ரீ விருது எல்லாம் சிரிப்பு நடிகர்கள் விவேக்குக்கும் கஞ்சா கருப்புக்கும் கிடைக்கும். (அல்லது, கிடைத்து விட்டதா?) அது பற்றிப் பெருமைப்பட எதுவும் இல்லை. இந்தி சினிமா உலகில் இதுவரை நுழைந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமா பிரமுகர் யார்?

சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழ்ர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. பாலச்சந்தரை இயக்குனர் சிகரம் என்றார்கள். அவர் பெயரும் இந்தி சினிமாவில் தெரியாது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்குச் சென்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர், மணி ரத்னம். இரண்டாமவர், ஏ.ஆர். ரஹ்மான். இவர்களில் ரஹ்மான் இந்தி எல்லையைத் தாண்டி உலக அளவில் சென்று விட்டவர். இந்த இருவரைத் தவிர வேறு யாரையுமே இந்தி சினிமா ஏற்கவில்லை. (முருகதாஸைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்). கமல்ஹாசன் இந்தி சினிமாவில் கால் பதிக்க (தடம் பதிக்க அல்ல) எவ்வளவோ முயற்சி செய்தார். ஏக் தூஜே கேலியே என்ற படத்தில் நடித்தார். கேலி செய்து அனுப்பி விட்டார்கள். காரணம், அவர் தமிழ்த் தரத்தை வைத்துக் கொண்டு இந்திக்குச் சென்றார். ஆனால் இந்தியோ இன்று உலகத் தரத்துக்கு சவால் விடக் கூடிய நிலைக்குச் சென்று விட்டது.

(இப்போது கூட இந்தியில் வெளிவந்த A Wednesday என்ற அருமையான படத்தைத் தமிழில் எடுக்கிறார் கமல். நஸ்ருத்தீன் ஷா ஒரு சராசரி மனிதனாக நடித்த படம் அது. ஒரு எளிமையான – மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த – புற நகர் ரயிலில் பயணம் செய்யும் ஒரு குமாஸ்தாவாக நடிக்க கமலின் ஆஜானுபாகுவான தோற்றம் இடம் கொடுக்குமா? அதுவும் தவிர, படத்தின் தலைப்பு ‘ஒரு தலைவன் இருக்கின்றான்’. ’ஒரு புதன்கிழமை’ படத்தின் செய்தியே ’ஒரு நல்ல தலைவன் இல்லாமல் ஊழலில் புரளும் அரசியல்வாதிகளால் இந்தியா சீர்கெட்டுப் போய் விட்டது’ என்பதுதான்.)

நிலைமை இப்படியிருக்க, இவர் எதை இந்தியத் தரம் என்றும், அமெரிக்கத் தரம் என்றும் கூறுகிறார்?

எங்கிருந்தோ வந்த அனுராக் காஷ்யப் என்ற மனிதரை இன்று ’தேவ்.டி’ என்ற ஒரே படத்தின் மூலம் உலகமே திரும்பிப் பார்க்கிறதே; அது எப்படி நிகழ்ந்தது? உலக சினிமாவைக் கரைத்துக் குடித்திருக்கும் கமலுக்கு அது தெரியாதா?

காஷ்யப்பின் பேட்டி ஒன்றை இன்று படித்தேன். தேவ்.டியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரான கல்கி காஷ்யப்பின் காதலி. அவருக்காகவே காஷ்யப் Happy Ending என்ற படத்தை எடுக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். விஷயம் அது அல்ல. இந்தப் படம் ரொமானிய இயக்குனரான Cristian Mungiu-வின் 4 Months 3 Weeks 2 Days-இன் பாணியை (Genre) ஒத்திருக்கும் என்கிறார். காஷ்யப் குறிப்பிடும் இந்தப் படம் 2007-இல் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மிகச் சிறந்த படத்துக்கான விருதைப் (Palme d’Or) பெற்ற படம்.

ஒத்திலியா, கப்ரியாலா என்ற இரண்டு தோழிகள். கப்ரியாலா கருத் தரித்து விடுகிறாள். அப்போது கம்யூனிஸ்ட் ரொமானியாவில் கருக் கலைப்பு தடை செய்யப் பட்டிருக்கிறது. அந்த நிலையில் தன்னுடைய தோழிக்கு கருக் கலைப்பு செய்ய உதவி செய்கிறாள் ஒத்திலியா. டாக்டர் வந்து பரிசோதித்த பிறகு ‘மூன்று மாதக் கருதான்’ என்று கப்ரியாலா சொன்னது பொய் என்று தெரிகிறது. ”கரு இப்போது கிட்டத்தட்ட ஐந்தாவது மாதத்தில் இருக்கிறது” என்கிறார் டாக்டர். (சரியாகக் கணக்கிட்டால் நான்கு மாதம், மூன்று வாரம், இரண்டு நாள்). விஷயம் வெளியே தெரிந்தால் டாக்டருக்கு 10 ஆண்டுகள் ஜெயில். ”கரு இவ்வளவு முதிர்ந்த நிலையில் என்னால் அபார்ஷன் செய்ய முடியாது” என்று மறுக்கும் டாக்டரோடு படுத்து அவரைத் தன் தோழிக்குக் கருக் கலைப்பு செய்ய இணங்க வைக்கிறாள் ஒத்திலியா. (ஒத்திலியாவுக்கும் ஒரு காதலன் இருக்கிறான்). கடைசியில் கருக் கலைப்பு முடிந்து வெளியே வந்து விழும் அந்தக் கருவை எப்படி யாருக்கும் தெரியாமல் டிஸ்போஸ் செய்வது என்ற பிரச்சினை எழுகிறது. இப்படிப் போகிறது க்றிஸ்டியன் முங்கியூவின் படம்.

இதே போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தினம்தினம் ஆயிரம் நடக்கின்றன. இங்கே கருக் கலைப்பு தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல என்றாலும் சமூகத் தடை உட்பட இதில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. சமூக எதார்த்தம் இப்படி இருக்க, இங்குள்ள உலக நாயகர்கள் எடுப்பது தசாவதாரம்! எப்படித் தமிழ் சினிமாவை உலக அரங்கில் மதிப்பார்கள்?